ADDED : ஜூன் 04, 2026 11:07 PM
ஜே.ஜே.நகர்: கார் உதிரி பாகம் விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர், கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். கள்ளத்தொடர்பு காரணமா என விசாரணை நடக்கிறது.
பெங்களூரு ஜே.ஜே.நகர் தேவராஜ் அர்ஸ் நகரில் வசித்தவர் அக்ரம் பாஷா, 45. ஜே.சி.நகரில் கார் உதிரி பாகம் விற்பனை கடை நடத்தி வந்தார். நேற்று முன்தினம் இரவு, சாம்ராஜ்பேட்டில் உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று விட்டு, நேற்று அதிகாலை 1:00 மணிக்கு அக்ரம் பாஷா பைக்கில் வீட்டிற்கு சென்றார்.
ஜே.ஜே.நகர் திப்பு சுல்தான் சவுக் பகுதியில், பைக்கை மறித்த நான்கு பேர், அக்ரம் பாஷாவுடன் தகராறு செய்தனர். பின், அவரை கத்தியால் குத்திவிட்டு தப்பினர்.
பலத்த கத்திக்குத்து காயம் அடைந்து உயிருக்கு போராடியவரை, அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், வழியிலேயே இறந்து விட்டார். அக்ரம் பாஷாவை கொன்றது யார், என்ன காரணம் என தெரியவில்லை. கள்ளத்தொடர்பா, தொழில் போட்டியா என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றன.
