ADDED : ஜூன் 22, 2026 03:34 AM
பெங்களூரு: ஏரியில் மருத்துவ கழிவுகளை கொட்டிய டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு ரூரல் யண்டகானஹள்ளி ஏரி பகுதியில் மருத்துவ கழிவு கொட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இவ்விஷயத்தில் நடவடிக்கை எடுக்குமாறு, ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அமைச்சர் ஈஸ்வர் கன்ட்ரே அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
இதையடுத்து, தாலுகா சுகாதார அதிகாரி பத்மினி, சம்பவ இடத்தை நேற்று பார்வையிட்டார். ஏரி பகுதியில் ஊசிகள், ரத்தக்கரை படிந்த துணிகள், காலியான குளுக்கோஸ் பாட்டில்கள் ஆகியவை கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
அப்போது, அதே பகுதியில் கிளினிக் நடத்தும் டாக்டர் அருண் கிரிஷ் சாகரே என்பவர் மருத்துவ கழிவுகளை கொட்டுவது தெரிய வந்தது. இதையடுத்து, அவர் டாக்டர் அருண் மீது நெலமங்களா போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். டாக்டர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
