வருவாய் துறை குறட்டை
கோ ல்டு சிட்டி முனிசி.,க்கு சொந்தமான காலி இடங்கள் எங்கெங்கு இருக்கின்றன என்பதற்கான அறிகுறியே இல்லை. இருந்தால் தானே வேலி அமைத்து, 'இது எங்கள் சொத்து' என்று வெளிப்படுத்தி இருப்பாங்க. காலி இடமே இல்லையா; சுருட்டிட்டாங்களா; யார் அந்த நபர்; அவரை வெளியே காட்ட வேண்டாமா.
முனிசி., பகுதியில் இருக்கிற சுரங்க நிறுவனத்துக்குரிய இடத்தை யாரும் அபகரிக்க கூடாதென பாதுகாக்குறாங்க. ஆனால், முனிசி., இடம் காணாமலா போனது.
கோல்டு ரேட்டு போல மனை ரேட்டும் பல மடங்கு எகிறுவதால், தேடுங்கள் கிடைக்கும் என்றாலும் கிடைக்க வில்லை. மாபியா கும்பலால் கால்வாய் கூட விட்டு வைக்கலயாம்.
நீதிபதிகள் குடியிருப்பு பகுதியில் இருந்த மைதானம் என்னானது. கண்டு பிடிக்க கண்ணை திறப்பாங்களா. வருவாய் துறை குறட்டை விடலாமா.
உயர் கல்விக்கு உயிரில்லை...
கோ ல்டு சிட்டியில் அரசு பொறியியல், மருத்துவ, சட்டக்கல்லுாரி எதுவுமே இல்லை. உயர் கல்விக்கு கேபிடல் சிட்டிக்கு தான் பறக்க வேண்டும். பல லட்சம் வைத்திருப்போர் தான், தங்களின் லட்சிய கனவுகளை நிறைவேற்றிக் கொள்ள தனியார் கல்லுாரிகளில் பொறியியல், சட்டம் படிக்க முடியும். கோடி இருந்தால் மட்டுமே மருத்துவம் படிக்க இயலும்.
கோல்டு சிட்டியில் சிங்கம், புலி, தளபதி, வீராதி வீரர், சூரர் என்றவர் எல்லாம் அசெம்பிளிக்கும், செங்கோட்டைக்கும் போனார்களே தவிர, இவைகள் எல்லாம் கோல்டு சிட்டிக்கு கொண்டு வராததன் சாபக்கேடு என்னவோ.
வருது... வருது... தொழிற்சாலைகள் என்று சொல்கிற தேனான வார்த்தைகள் தான் இப்பவும் பெருமையாக பேசிக்கிறாங்க. ஆனால், வேலையைத் தேடி 100 மைல் துாரம் வரை பயணிக்கிற துர்பாக்கியம், எப்போ மறையுமோ.
சிதைந்து கிடக்கும் கனவுகள்
மாவட்டத்திற்கு ஒரு விமான நிலையம் ஏற்படுத்துவதாக பல ஆண்டுகளுக்கு முன் அரசு முடிவு செய்தது. அதில் கோலாரில் கோல்டு சிட்டி பொருத்தமான இடம் என ஆலமரம் பகுதியில் பல சர்வே எடுத்தாங்க. அது ஒரு கண்துடைப்பு கதையாக மாறி விட்டது.
கோல்டு சிட்டிக்கு அப்பால் 30 கி.மீ., துாரத்தில் அண்டை மாநிலத்தில் விளம்பர பிரச்சாரத்தை குறைத்து, ஆக வேண்டியதை செயலில் காட்டுறாங்க.
விமான நிலையமும் அங்கே வரப்போகுது. திராவிட பல்கலைக் கழகம், கிருஷ்ணா நதி நீர் வந்தாச்சு. சாலை விரிவாக்கம், மருத்துவ வசதி எதிலும் குறையின்றி வளர்ச்சியில் சொர்க்கமாகுது.
இயற்கையின் வரப்பிரசாதமாக உள்ள தங்க நகரமோ தரித்திர நகரமாகுதே. மறுபடியும் கோல்டு நகரம் ஓல்டு நிலைக்கு திரும்ப வாஸ்கோடகாமா, கொலம்பஸ் தேடி வரணுமோ. இந்த லிட்டில் இங்கிலாந்தில் இருந்து ஓட ஓட விரட்டி வெளியேற வைத்து பெருசா என்ன சாதித்தோமென சிந்திக்க வைக்குது. சிதைந்து கிடக்குது நினைவுகள்.
யாருக்கு லாபம்?
பொ ன் விளையும் தொகுதியின் வளர்ச்சிப் பற்றி பேசுவதில் ஒண்ணு ஏ.பி.எம்.சி., இந்த 'ஏ.பி.எம்.சி.,'-யை கோல்டு சிட்டியில் இருந்து 30 மைல் தொலைவிலும், அண்டை மாநிலத்திலிருந்து ஒரு கி.மீ., துாரத்திலும் ஏற்படுத்தி இருக்காங்க. இதுக்கு அரசு பணம், நிலம் எல்லாம் கொடுக்கப்பட்டு உள்ளது.
இது கோல்டு சிட்டி தொகுதிக்கு எந்த வகையில் யூஸ் ஆகும். அதிலும் அந்த இடத்தில் பளபளக்கும் கிரானைட்ஸ் இருக்கிற விஷயம் மாநில சுரங்க சர்வேயர்களுக்கு தெரியாதா.
அங்கு வெட்டி எடுத்த கிரானைட்ஸ் எத்தனை டன்; அதனை யாருக்கு விற்கப்பட்டது. இதனால் அரசுக்கு என்ன வருவாய். ஏன் இதுவரை கணக்கு கேட்கவில்லை. இதன் மூலம் பல கோடி ரூபாய் யாருக்கு வருமானம்.
கர்நாடக சொத்து எந்த மாநிலத்துக்கு வெளியேறியது. இதனை தடுக்க வேண்டியவங்க, ஏன் சுருண்டு கிடக்கின்றனர். இதன் பேரில் உயர் மட்ட விசாரணைக்கு ஆதாரம் திரட்டும் வேலையும் நடக்குது.

