ADDED : மே 30, 2026 02:01 AM
-நாங்களும் மனுஷங்க தான்!
கோ ரமண்டல் பகுதியில் 30 ஆண்டுகளாக சாலை பணிகளை மேற்கொள்ளவே இல்லையாம். தொகுதி அசெம்பிளி மேடமும் வந்து பார்த்ததோடு சரி. ஆனால் 700 மீட்டர் சாலையை அமைக்க மனசே இல்லையாம்.
கிராம பகுதிகளில் சிறு சிறு தெருக்களை கூட சிமென்ட் ரோடாக மாற்றி பெருமை படுகிறவங்க, சிட்டியை ஏன் கண்டுக்கலயோ. இங்கு இருக்கிறவங்க கூட மனுஷங்க தான்னு தெரிஞ்சிக்க, இன்னும் எத்தனை ஆண்டுகள் பிடிக்குமோ. முனிசி.,யின் 3 வது வார்டு இது. இவ்வளவு மோசமான சாலை, கோல்டு சிட்டியில் எங்குமே இருக்காது என்கிறாங்க. கொஞ்சமாவது மனித நேயம் உள்ளவங்க பார்வையாவது இந்த சாலை மீது எப்போ விழுமோ என்று இப்பகுதி மக்கள் குறையா சொல்றாங்களே.
ஏமாத்து தந்திரம்!
பெ ரிய போராட்டம் நடத்தப்போவதா புல்லுக்கட்டு தலைவர் தலைமையில் உள்ள ஒரு சங்கம் பரபரப்பா பேட்டி கொடுத்தது. இது யாரை எதிர்த்து போராட்டம் என்பது தான் கேள்வி குறியாக இருந்தது.
ஏன்னா, ம.அரசின் இண்டஸ்ட்ரியல் மினிஸ்டர் புல்லுக்கட்டுக்காரர் தானே. கோலார் செங்கோட்டைக்காரரும் புல்லுக்கட்டுக்காரர் தானே. இப்படி இருக்க யார் மீது குறைச்சொல்ல போராட்டமோ. மைன்ஸ் தொழிலாளர் பிரச்னை என்பது ஒரு தொடர் கதை. இதை முடித்து வைக்க கோர்ட்டுக்கு போனாங்க. இப்போ மேல் முறையீட்டு விசாரணையில் இருக்க எதுக்காக போராட்டம். யாரை யார் அடையாளப்படுத்திக் கொள்ள இந்த கூத்து என சிரிப்பா சிரிக்கிறாங்க புல்லுக்கட்டுக்குள் உள்ள ஒரு கோஷ்டி.
போராட்டத்தை கைவிடுமாறு செங்கோட்டைக்காரர் ஆர்டர் போட்டதால் போராட்டம் கைவிடப்பட்டு ஒத்தி வெச்சிட்டாங்களாம். அடுத்த மாதம் மைன்ஸ் மந்திரியை செங்கோட்டைக்காரர் சந்தித்து பிரச்னையை தீர்க்க போவதாக அல்வா கொடுத்திருக்கிறார். இதையும் நீர் மேல் எழுத்தாக நெனச்சிக்கலாமா.
அதிகரிக்கும் டார்ச்சர்!
தே வாலயத்துக்குள் ரவுடி ஒருவரை குண்டுக்கட்டாக துாக்கி சென்று கொடுமைப்படுத்தியதாக, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தின போது பாதிப்புகளை பிலிம் ஓட்டி இருக்காரு.
இது மாநில அரசின் உள்துறையில், மனித உரிமை குழுக்களில் விமர்சனமா மாறி இருக்குது. அந்த ரவுடி மீது மேலும் சில புது புது வழக்குகள் பதிவானதாகவும் மிரள வெச்சிருக்கு.
கோல்டு சிட்டியின் ஆ.பேட்டையில் மட்டும் தானா இப்படி ரவுடிகள் அட்டகாசமும், கொலை, கொள்ளை குற்றங்களும் இருக்குது. மற்ற எந்த ஒரு காவல் நிலைய பகுதிகளில் இல்லையோ.
ஒன்பது காக்கி நிலையங்களில் கடந்த ஓராண்டின் குற்றபட்டியலை வெளியிட்டால் எங்கு எவ்வளவு கிரைம் கூடியிருக்கு, குறைந்திருக்கு என வெளிச்சத்துக்கு வரும் இல்லையா. ஏதோ ஒரு அரசியல் பின்னணியில் இந்த டார்ச்சர் அதிகரிப்பதாக உள்துறை, நீதித்துறை வரை வழக்கு விபரம் தெரிந்தவங்க தங்களின் கிளைன்ட்டுக்காக அம்பலப்படுத்தி இருக்காங்களாம்.
'நோ சான்ஸ்'
அ ப்பாவால் தான் மகளுக்கு மந்திரி பதவி கிடைக்க வாய்ப்பு இல்லையாம். லேடீஸ் கோட்டா, ஜாதி கோட்டா ரெண்டும் இருந்தும் எதிர்ப்பார்ப்பு புஸ்ஸ்ஸ்னு போயிருக்காம். ஏன்னா ஒரே குடும்பத்தில் ரெண்டு பேருக்கு மந்திரி பதவி வழங்க 'நோ சான்ஸ்' என்பதை திட்டவட்டமாக சொல்லிட்டாங்களாம்.
நைனாவுக்கு டி.சி.எம்., பதவி கிடைச்சாலே போதும். அதை பிடித்துக் கொண்டு எல்லாவற்றையும் சாதிக்க முடியும்னு கோல்டு சிட்டி அசெம்பிளிக்காரர் டாப் லெவல் பாலிடிக்ஸ் மீது கவனம் செலுத்தி வருகிறாராம்.
அவருக்கு கேபினட் ரேங்க் வாரியத் தலைவர் பதவி கிடைக்கலாம் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டிருப்பதால், பந்தா இல்லாமல் அடக்கி வாசிக்க தொடங்கி இருக்காரு.
அமைச்சரவை விரிவாக்கம் நடந்தால், கோல்டு சிட்டிக்கு லாபம் தானாம்!
