தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ சினி கடலை

சினி கடலை

சினி கடலை


ADDED : மார் 27, 2025 11:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 27, 2025 11:07 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கன்னடத்தில் சார்மினார், சூ மந்தர் உட்பட பல வெற்றி படங்களில் நடித்தவர் மேகனா காங்க்வர். நடிப்புக்கு இடையிலும் பிஹெச்.டி., பட்டம் பெற்றுள்ளார். இது குறித்து, அவரிடம் கேட்ட போது, ''சினிமா மற்றும் இலக்கியம் குறித்து ஆய்வு செய்து, 'டாக்டரேட்' பட்டம் பெற்றுள்ளேன். இது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது. ஆறு ஆண்டுகள் உழைப்பு பலன் அளித்துள்ளது.

இந்த பட்டத்தை என் தந்தைக்கு அர்ப்பணிக்கிறேன். ஏன் என்றால் நான் பிஹெச்.டி., படிக்க வேண்டும் என்பது, தந்தையின் கனவு,'' என்றார்.

சுதீப் நடிப்பில், பில்லா ரங்கா பாஷா படப்பிடிப்புக்கு ஏற்பாடு நடக்கிறது. வரும் நாட்களில் குறைந்தபட்சம் இரண்டு, மூன்று புதிய படத்துக்கு கையெழுத்திட திட்டமிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ''அடுத்தடுத்த படங்களில் நடிப்பதாக, ரசிகர்களுக்கு வாக்களித்தேன். அதை நிறைவேற்ற கதை கேட்பதில் ஈடுபட்டுள்ளேன். கன்னடம் மட்டுமின்றி சில தெலுங்கு இயக்குனர்களுடனும் பேச்சு நடக்கிறது. தற்போது பில்லா ரங்கா பாஷா படப்பிடிப்புக்கு தயாராகிறோம்,'' என்றார்.

நடிகர் துனியா விஜய், முழு நேர இயக்குனராக மாறி வருகிறார். ஏற்கனவே இரண்டு படங்களை இயக்கி, வெற்றியை ருசித்த அவர் தற்போது சிட்டி லைட்ஸ் என்ற படத்தை இயக்குகிறார். இதில் வினய் ராஜ்குமார் நாயகனாக நடிக்கிறார். படத்தின் கதை குறித்து அவர் கூறுகையில், ''படத்தில் என் கதாபாத்திரம் குறித்து, பகிரங்கப்படுத்த முடியாது.

''என் பங்கு படப்பிடிப்பு விரைவில் துவங்கும். ஒரு நகரம் ஆயிரக்கணக்கான மக்களை கை வீசி அழைக்கிறது. அதே போன்று வாழ்க்கையை தேடி, வேறு ஊரில் இருந்து நகருக்கு வரும் இருவரின் கதையாகும். அவர்களின் வாழ்க்கை பயணம் எப்படிப்பட்டது என்பதை, படத்தில் காண்பித்து உள்ளோம்,'' என்றார்.

ரேடியோ ஜாக்கிகள் ரோஹித், ராஜேஷ், டானிஷ் செய்ட், பிரதீப், பிருத்வி உட்பட பல ரேடியோ ஜாக்கிகள், திரையுலகிலும் கலக்குகின்றனர். நடிப்பதுடன், பட இயக்கம், தயாரிப்பிலும் ஆர்வம் காட்டுகின்றனர். இந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருப்பவர் மயூர். இவர் மும்பையில் அனுபம் கேர் அகாடமியில் நடிப்பு, இயக்கம் பயிற்சி பெற்றார்.

தற்போது மாதொந்து ஹேளுவே என்ற படத்தை தயாரித்து, நாயகனாகவும் நடிக்கிறார். இது குறித்து, மயூர் கூறுகையில், ''ஹூப்பள்ளி இளைஞன், மைசூரு இளம்பெண் இடையிலான காதல் கதையாகும். பெங்களூரு, ஹூப்பள்ளி, மைசூரு, சிக்கமகளூரு, மங்களூரில் படப்பிடிப்பு நடத்தினோம். அபூர்வா ஆராத்யா நாயகியாக நடிக்கிறார்,'' என்றார்.

பரகூர் ராமசந்திரப்பா இயக்கிய, தாயி கஸ்துார் காந்தி திரைப்படம், இன்று முதல் அமேசான் பிரைமில் திரையிடப்படுகிறது. இது குறித்து, படக்குழுவினர் கூறுகையில், ''காந்தியின் துணைவியான கஸ்துாரி பாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்ட கதை. அவரது வாழ்க்கையில் நடந்த, சில முக்கியமான சம்பவங்களை, படத்தில் காட்டியுள்ளோம். பல திரைப்பட விழாக்களில் பங்கேற்றது. தாயாக, மனைவியாக, போராளியாக வாழ்ந்த அவரது வாழ்க்கை, மற்றவருக்கு முன் மாதிரியாகும். கஸ்துாரி பாவாக நடிகை ஹரிபிரியா, காந்தியாக நடிகர் கிஷோர் நடித்துள்ளனர். மூத்த நடிகர் ஸ்ரீநாத், அம்பேத்கர் கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்,'' என்றனர்.

உண்மை சம்பவத்தை, மையமாக கொண்டுள்ள ப்ரீத்திய ஹுச்சா திரைப்படம், திரைக்கு வர தயாராகிறது. குமார் கதை, திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். கதை குறித்து அவரிடம் கேட்ட போது, ''1990ல் ஹாசனில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. திருமணமான முதல் நாளே, அப்பாவி இளம்பெண், மும்பையின், காமாட்டிபுரா என்பவருக்கு விற்கப்படுகிறார்.

''அதன்பின் அவரது வாழ்க்கையில் என்னென்ன திருப்பங்கள் ஏற்படுகின்றன. மனைவியை பறிகொடுத்த நாயகன் என்னவாகிறார் என்பதே, திரைக்கதையின் சாராம்சமாகும். விஜய், குங்கும் இருவரும் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர். பெங்களூரு, மாண்டியா, ஹாசன், ஸ்ரவணபெளகோலா, சிக்கமகளூரு, மும்பையில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது,'' என்றார்.

திடீர் திருப்பம்



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us