
பிரீமியர் ஷோ
மறைந்த நடிகர் ராஜ்குமாரின் மூன்றாவது தலைமுறையை சேர்ந்த நடிகர் யுவராஜ் குமார் நடித்த, எக்கா திரைப்படம் வரும் 18ம் தேதி திரைக்கு வரவுள்ளது. அதற்கு முன்னதாக பிரீமியர் ஷோ பார்க்க வருகை தரும்படி, முதல்வர் சித்தராமையாவிடம் படக்குழுவினர் வேண்டுகோள் விடுத்தனர்.
நேற்று முன்தினம் யுவராஜ் குமார் உட்பட படக்குழுவினர் முதல்வரை, காவேரி இல்லத்தில் சந்தித்தனர். தான் நாயகனாக நடித்த படத்தின் பிரீமியர் ஷோவை பார்க்க வரும்படி, யுவராஜ் குமார் அழைப்பு விடுத்தார். அவரை முதல்வர் வாழ்த்தினார்; பிரீமியர் ஷோவை பார்க்க வருவதாக கூறினார்.
உயிர் காத்த மெத்தை
சிம்பல் சுனி இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு, பெங்களூரின், கன்டீரவா ஸ்டுடியோவில் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன், பாடல் காட்சி படமாக்கப்பட்டது. பாடலுக்காக நாயகி சாத்விகா, உயரத்தில் கயிற்றை பிடித்தபடி தொங்கி கொண்டிருந்தார்.
அவ்வேளையில் நிலை தடுமாறி கீழே விழுந்தார். கீழே முன்னெச்சரிக்கையாக மெத்தைகள் போட்டிருந்ததால், அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். காயமும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தால், படப்பிடிப்பு இடத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. சிறிது நேரம் படப்பிடிப்பை நிறுத்தினர்.
பாசப்பிணைப்பு
மூத்த நடிகர் தேவராஜின் மூத்த மகன் பிரஜ்வல் மட்டுமின்றி, இளைய மகன் பிரணமும், படங்களில் பிசியாக நடிக்கிறார். இவர் நாயகனாக நடிக்கும், சன் ஆப் முத்தண்ணா திரைப்படம், ஆகஸ்ட் 22ல் திரைக்கு வரவுள்ளது. ஏற்கனவே டீசர் வெளியாகி, ரசிகர்களை கவர்ந்தது. இதில் ரங்காயணா ரகு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
ஆகஸ்ட் முதல் வாரம், அமெரிக்கா, துபாயில் படத்தை வெளியிட, படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். தந்தை, மகனின் பாசப்பிணைப்பை கூறும் கதையாகும். தந்தை, மகனாக முறையே பிரணம், ரங்காயணா ரகு நடித்துள்ளனர். குஷி ரவி நாயகியாக நடித்துள்ளார். படத்தில் இயக்குனர் யோகராஜ் ஒரு பாடலை எழுதியுள்ளாராம்.
ஆடியோ உரிமை
தருண் கிஷோர் இயக்கத்தில் தயாராகும் புதிய திரைப்படத்துக்கு, ஏழுமலை என பெயர் சூட்டியுள்ளனர். சமீபத்தில் நடந்த டைட்டில் வெளியீட்டில் நடிகர் சிவராஜ்குமார் பங்கேற்று, படக்குழுவினரை வாழ்த்தினார். இதில் ராணா, பிரியங்கா ஆச்சார் நாயகன், நாயகியாக நடிக்கின்றனர்.
கர்நாடகா - தமிழக எல்லையில் நடக்கும் கதையாகும். உண்மை சம்பவத்துடன், கற்பனையை கலந்து, திரைக்கதை பின்னப்பட்டுள்ளது. இத்திரைப்படம் கன்னடத்துடன், தமிழ், தெலுங்கிலும் திரையிடப்படுகிறது. படத்தின் ஆடியோ உரிமை நல்ல விலைக்கு விற்பனையானதால், படக்குழுவினர் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
குற்றம் செய்தது யார்?
தமிழ் திரையுலகில் கமல், ஸ்ரீதேவி ஜோடி மிகவும் பிரபலமானது. இதே பெயரில் கன்னடத்தில் திரைப்படம், திரைக்கு வர தயாராகிறது. இதில் அமைச்சர் செலுவராயசாமியின் மகன் சச்சின், நாயகனாக நடிக்கிறார்.
இவருக்கு ஜோடியாக சங்கீதா பட் நடிக்கிறார். படத்தின் துவக்கத்தில் நடக்கும் ஒரு குற்றத்தை, யார் செய்தனர் என்பதை கண்டுபிடிப்பதே, கதையின் சாராம்சமாகும். கமலும், ஸ்ரீதேவியும் எப்படி சந்திக்கின்றனர், இவர்களுக்கு இடையே என்ன சம்பந்தம் என்பதை, படத்தில் பார்க்க வேண்டும். கிஷோர், ரமேஷ் இந்திரா உட்பட பலர் நடித்துள்ளனர்.
தயாரிப்பாளரான இசை
காந்தாரா உட்பட பல சூப்பர் ஹிட் படங்களுக்கு, இசை அமைத்தவர் அஜனீஷ் லோக்நாத். இவர் முதன் முறையாக ஜஸ்ட் மேரிட் தயாரிக்கிறார். படத்தில் ஷைன் ஷெட்டி, அங்கிதா அமர் நாயகன், நாயகியாக நடித்துள்ளனர்.
இதில் முதன் முறையாக வாணி ஹரிகிருஷ்ணா நடித்துள்ளார். இவர் ஏற்கனவே பல தொடர்களில் நடித்தவர். இந்த படத்தில் வாணி ஹரி கிருஷ்ணா, மங்களா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இவர் சிறந்த பாடகி. தன் குரல் வளம் மூலமாக அனைவரையும் கவர்ந்தவர். இப்போது திரையுலகில் நுழைந்துள்ளார்.