ADDED : ஆக 19, 2026 03:11 AM
துமகூரு: பள்ளி அருகில் உள்ள கட்டடத்தின் துாண் விழுந்ததில், நான்காம் வகுப்பு மாணவர் தலை நசுங்கி உயிரிழந்தார்.
துமகூரு மாவட்டம் சிக்கநாயக்கனஹள்ளி தாலுகாவின் பிலிகிஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தனுஷ், 10. இங்குள்ள அரசு உயர் துவக்க பள்ளியில், நான்காம் வகுப்பு படித்தார்.
நேற்று காலை பள்ளிக்கு வந்த அவர், தனது நண்பர்களுடன் பள்ளிக்கு அருகில் உள்ள, நந்தினி பால் டெய்ரி உள்ள கட்டடத்தில் விளையாடி கொண்டிருந்தார்.
கட்டடத்தில் உள்ள மூன்று துாண்களில் ஒன்றில் கயிறு கட்டப்பட்டிருந்தது. அந்த கயிற்றை பிடித்து அவர்கள் விளையாடி கொண்டிருந்தனர்.
திடீரென துாண் ஒன்று, தனுஷ் மீது விழுந்தது. இதில் அவரின் தலை நசுங்கி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். மற்ற இரு மாணவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதை பார்த்த அப்பகுதியினர், அதிர்ச்சியடைந்தனர். 'கட்டடத்தின் தரமற்ற கட்டுமானமே சிறுவனின் மரணத்துக்கு காரணமாக இருக்கலாம்.
நந்தினி பால் டெய்ரி கட்டடத்தின் கட்டுமான தரம் குறித்து முறையான விசாரணை நடத்த வேண்டும்' என்று அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.
