/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தசரா யானைகள் மூலம் துாய்மை விழிப்புணர்வு
/
தசரா யானைகள் மூலம் துாய்மை விழிப்புணர்வு
ADDED : ஆக 14, 2025 11:14 PM

மைசூரு: மைசூரு மாநகராட்சி சார்பில் தசரா யானைகள் மூலம் துாய்மை விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நாட்டின் 79வது சுதந்திர தினத்தை ஒட்டி, மைசூரு மாநகராட்சி சார்பில், 'வீடு தோறும் மூவர்ண கொடி, வீடு தோறும் துாய்மை' என்ற பெயரில் நேற்று விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தசராவுக்கு வந்துள்ள அபிமன்யு, பிரசாந்த், ஏகலைவா, தனஞ்செயா, கஞ்சன், காவேரி, லட்சுமி, மகேந்திரா, பீமா ஆகிய ஒன்பது யானைகள், விழிப்புணர்வில் பங்கேற்றன.
ஒவ்வொரு யானையும், தங்களின் தும்பிக்கையில் தேசிய கொடியை ஏந்தியபடி, அரண்மனை முன்புள்ள கோட்டோ ஆஞ்சநேயர் கோவில் முன்பிருந்து, கே.ஆர்., மருத்துவமனை சதுக்கம் சென்று, மீண்டும் அரண்மனை வரை ஊர்வலமாக சென்று வந்தன.
மாநகராட்சி அதிகாரிகள், வனத்துறை ஊழியர்கள், போலீசார், பொது மக்களும் கையில் மூவர்ண கொடியுடன் பங்கேற்றனர்.
அப்போது மாநகராட்சி ஊழியர்கள், 'வீடு தோறும் மூவர்ண கொடி, வீடு தோறும் துாய்மை' என்று கோஷம் எழுப்பி, நகரை துாய்மையாக வைத்து கொள்ள, பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.
மாநகராட்சி கமிஷனர் தன்வீர் செய்க் ஆசிப் பேசுகையில், ''மைசூரு மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும்.
அடுத்த முறை சுத்தமான நகரம் பட்டியலில் மைசூரு இடம் பெற, ஒத்துழைக்க வேண்டும். தொடர் மழையால் சேதமடைந்த சாலைகள், தசரா துவங்குவதற்கு முன் சரி செய்யப்படும்,'' என்றார்.