ADDED : ஏப் 11, 2026 04:19 AM
பெங்களூரு: கர்நாடகாவில் இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் முடிந்து விட்டதால், முதல்வர் சித்தராமையா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், நாளை டில்லி செல்ல திட்டமிட்டுள்ளனர்.
கர்நாடகாவில் இடைத்தேர்தல் காரணமாக, முதல்வர் மாற்றம் விவாதம் தற்காலிகமாக நின்றிருந்தது. தற்போது தேர்தல் முடிந்ததால், துணை முதல்வர் சிவகுமாரின் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், டில்லிக்கு செல்ல திட்டமிட்டிருந்தனர். மேலிடத்தை சந்தித்து அமைச்சரவையை மாற்றி அமைக்க வேண்டும்.
சரியாக பணியாற்றாத அமைச்சர்களை நீக்கிவிட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும். சிவகுமாரை முதல்வர் பதவியில் அமர்த்த வேண்டும் என, நெருக்கடி கொடுக்க நினைத்துள்ளனர்.
அவர்கள் டில்லி செல்வதற்கு முன், முதல்வர் சித்தராமையா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள், தலைமை கொறடா அசோக் பட்டன் தலைமையில் டில்லி செல்கின்றனர். இக்குழுவில் ஜெயசந்திரா, பேளூர் கோபால கிருஷ்ணா, சிவலிங்கேகவுடா, ராஜு காகே, லட்சுமண் சவதி, சுப்பாரெட்டி உட்பட, 20 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர்.
இவர்கள் மேலிட தலைவர்கள் வேணுகோபால், ரன்தீப் சிங் சுர்ஜேவாலாவை சந்திப்பர். சித்தராமையாவே முதல்வர் பதவியில் நீடிக்க வேண்டும்; அவரை மாற்றக்கூடாது. அமைச்சரவையை மாற்றி அமைத்து, தங்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என, வேண்டுகோள் விடுப்பர் என்ற, தகவல் வெளியாகியுள்ளது.
