
பெங்களூரை உருவாக்கிய கெம்பே கவுடா வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு, கன்னடத்தில் இரண்டு திரைப்படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இசையமைப்பாளர் கிரண் தோடம்பைல், 'தர்மபீரு நாடபிரபு கெம்பே கவுடா' என்ற பெயரில் திரைப்படம் தயாரிக்க திட்டமிட்டுள்ளார். இதில் கெம்பே கவுடா கதாபாத்திரத்தில் நடிகர் உபேந்திரா நடிப்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது. மற்றொரு பக்கம் இயக்குநர் நாகாபரணாவும், கெம்பே கவுடா கதையை படமாக்குவதாக அறிவித்துள்ளார். இவரது படத்தில் நடிகர் தனஞ்செயா, கெம்பே கவுடா கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்புள்ளது. ஒரே கதையை அடிப்படையாக கொண்டு, கன்னடத்தில் இரண்டு படங்கள் தயாராவது அரிதானதாகும்.
மைசூரில் தமிழின் 'ஜெய்லர் - 2' திரைப்பட படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதனால் நடிகர் ரஜினி மைசூரில் தங்கியுள்ளார். இவரை காண ரசிகர்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும் வருகின்றனர். ரஜினிக்கு, நடிகர் ராஜ்குமாரின் குடும்பம் மிகவும் நெருக்கமானது. இவர்களுக்கு இடையே பல ஆண்டுகளாக, ஆழமான நட்புள்ளது. ராஜ்குமார் இல்லத்தின் நிகழ்ச்சியில், ரஜினி பங்கேற்க தவறியது இல்லை. தற்போது மைசூரில் உள்ள ரஜினியை, நடிகை தன்யா ராம்குமார், தன் தாய் பூர்ணிமாவுடன் நேற்று முன் தினம், படப்பிடிப்பு செட்டில் சந்தித்தார். ரஜினியுடன் படம் எடுத்துக் கொண்டனர். இதை சோஷியல் மீடியாவில், தன்யா ராம்குமார் வெளியிட்டுள்ளார்.
அரசியல்வாதிகளின் வாரிசுகள், திரையலகில் நுழைவது புதிய விஷயம் அல்ல. அமைச்சர்கள் செலுவரயசாமி, ஜமீர் அகமது கான், உட்பட, பலரின் மகன்கள் ஏற்கனவே திரையுலகில் நுழைந்து, ஹீரோவாகியுள்ளனர். இப்போது முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் மகன் கிரீட்டி, ஹீரோவாக அறிமுகமாகிறார். இவர் நடிக்கும் புதிய படத்துக்கு, 'ஜூனியர்' என, பெயர் சூட்டப்பட்டுள்ளது. படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. ஆக்ஷன், ரொமான்ஸ், காமெடி கலந்த டிரெய்லர், அனைவரையும் கவர்ந்துள்ளது. மக்களுக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது கன்னடம், தெலுங்கில் திரைக்கு வருகிறது.
கன்னடத்தில் 'யு டர்ன்', மலையாளத்தில் 'நான்சி' திரைப்படத்தில், தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் நடிகை ஷிரத்தா ஸ்ரீநாத். தமிழ், தெலுங்கில் அதிகம் பிசியாக இருக்கிறார். இவர் சோஷியல் மீடியாவில் பரபரப்பாக இருப்பவர். தற்போது கடற்கரை ஒன்றில் ஜாலியாக பொழுதுபோக்கும் ஷிரத்தா ஸ்ரீநாத், பிகினி உடைகள் அணிந்த படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். படங்களை கண்டு ரசிகர்கள் கிறங்கி போகின்றனர். பல விதமாக கமென்ட் செய்கின்றனர்.
இயக்குநர் மன்சோரே இயக்கிய, 'துார தீர யானா' திரைப்படம், ஜூலை 11ம் தேதி திரைக்கு வருகிறது. படக்குழுவினர் இதுவரை, நாயகன், நாயகியை தவிர மற்ற கலைஞர்களை அறிமுகம் செய்யவில்லை. இப்போது ஒவ்வொரு கதாபாத்திரங்களாக அறிமுகம் செய்கின்றனர். கவுரி என்ற கதாபாத்திரத்தில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் நடித்துள்ளார். இவர் மன்சோரே இயக்கத்தில் வெளியாகி, ஐந்து தேசிய விருதுகளை அள்ளிய 'நாதிசராமி' படத்திலும், கவுரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்போது அதே இயக்குநரின் படத்தில், அதே பெயர் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
குழந்தை நட்சத்திரமாக, திரையுலகில் அறிமுகமாகி, நாயகியாக வளர்ந்து பல வெற்றி படங்களை கொடுத்தவர் நடிகை அமுல்யா. புகழின் உச்சியில் இருந்தபோதே, திருமணம் செய்து கொண்டார். திருமணமான பின், நடிப்புக்கு முழுக்கு போட்டார். முழுமையான குடும்ப தலைவியாக மாறினார். தன் இரட்டை குழந்தைகள் பராமரிப்பில் ஈடுபட்டுள்ளார். தற்போது இவர் விதவிதமான போட்டோ ஷூட் நடத்தி, சோஷியல் மீடியாவில் வெளியிட்டுள்ளார். இவற்றை காணும்போது, அவர் மீண்டும் திரையுலகுக்கு திரும்புகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.