ரூ.100 கோடி நிலம் ஆக்கிரமிப்பு அமைச்சர் ஆதரவாளர் மீது புகார்
ரூ.100 கோடி நிலம் ஆக்கிரமிப்பு அமைச்சர் ஆதரவாளர் மீது புகார்
ADDED : ஜூலை 07, 2026 11:11 PM

பெங்களூரு: மத்திய அரசுக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை ஆக்கிரமித்ததாக, கர்நாடக அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடாவின் ஆதரவாளர் மீது லோக் ஆயுக்தாவில், பா.ஜ., பிரமுகர், என்.ஆர்.ரமேஷ் புகார் அளித்துள்ளார்.
பெங்களூரு நகர வளர்ச்சி துறை அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடாவின் நெருங்கிய ஆதரவாளரும், முன்னாள் கவுன்சிலருமான சேத்தன், மத்திய அரசின் நிலத்தை ஆக்கிரமித்ததாக, லோக் ஆயுக்தா ஐ.ஜி., சுப்பிரமணீஷ்வரர் ராவிடம், பெங்களூரு மாநகராட்சி முன்னாள் ஆளுங்கட்சி தலைவரும், பா.ஜ., பிரமுகருமான என்.ஆர்.ரமேஷ் நேற்று புகார் அளித்தார்.
பின், அவர் அளித்த பேட்டி:
பெங்களூரு கொடிகேஹள்ளி சகாகர் நகர் பகுதியில், 'சேர்மன் கிளப்' என்ற பெயரில் சொகுசு விடுதி உள்ளது. இதன் உரிமையாளரான முன்னாள் கவுன்சிலர் சேத்தன், அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடாவின் நெருங்கிய ஆதரவாளர்.
அந்த சொகுசு விடுதிக்கு பக்கத்தில் மத்திய அரசின் மின்சார துறைக்கு சொந்தமான, 3.06 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலம் ஜனாதிபதி பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தில், 0.8 ஏக்கர் நிலத்தை சேத்தன் ஆக்கிரமித்து உள்ளார்.
அந்த நிலத்தில் சொகுசு விடுதிக்கு வரும் வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் மதிப்பு, 100 கோடி ரூபாய்.
நிலம் ஆக்கிரமிப்பு தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடக்கிறது. சேத்தன் தனது தவறை ஒப்பு கொண்டார். கடந்த ஏப்ரல் மாதம் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை கைப்பற்ற சென்ற மின்சார துறை அதிகாரிகளை சேத்தன் உள்ளிட்டோர், அமைச்சர் கிருஷ்ணபைரே கவுடாவின் பெயரை பயன்படுத்தி மிரட்டி உள்ளனர்.
இதுபற்றி லோக் ஆயுக்தாவில் புகார் அளித்து உள்ளேன். முதல்வருக்கும் கடிதம் எழுதி உள்ளேன். நடவடிக்கை எடுக்காவிட்டால் சி.பி.ஐ., விசாரணைக்கு கோரிக்கை விடுப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
