/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்
/
மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்
ADDED : டிச 18, 2025 07:13 AM

பெலகாவி: காங்கிரசுக்கு எதிராக வெறுப்பு அரசியல் செய்வதாக, மத்திய அரசை கண்டித்து பெலகாவியில், காங்கிரஸ் நேற்று போராட்டம் நடத்தியது.
பெலகாவி சுவர்ண விதான் சவுதா வளாகத்தில் உள்ள, காந்தி சிலை முன்பு நேற்று காலையில் கூடிய, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்கள் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தினர். நேஷனல் ஹெரால்டு, யங் இந்தியாவுக்கு வெற்றி என்ற பதாகைகளை கையில் வைத்திருந்தனர்.
காங்கிரசுக்கு எதிராக மத்திய அரசு வெறுப்பு அரசியல் செய்வதாக கோஷம் எழுப்பினர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, அமலாக்கத்துறைக்கு எதிராகவும் கோஷம் எழுப்பப்பட்டது.
முதல்வர் சித்தராமையா பேசுகையில், ''நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா, ராகுலை பா.ஜ., துன்புறுத்தியது. அவர்களுக்கு எதிராக அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை, டில்லி நீதிமன்றம் ஏற்று கொள்ள மறுத்தது உண்மைக்கு கிடைத்த வெற்றி.
மகாத்மா காந்தி, அம்பேத்கரை பா.ஜ.,வால் ஏற்று கொள்ள முடியவில்லை. மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு திட்டத்தின் பெயரை ஜி ராம் ஜி என்று மாற்றி உள்ளனர். வரும் நாட்களில் ஜி மோடி ஜி என்று மாற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை,'' என்றார்.
துணை முதல்வர் சிவகுமார் பேசுகையில், ''நாட்டில் நாம் மட்டுமே ஆட்சியில் இருக்க வேண்டும். மற்ற கட்சிகள் இருக்கவே கூடாது என்பது பா.ஜ.,வின் திட்டம். காங்கிரஸ் தலைவர்களுக்கு எதிராக விசாரணை அமைப்புகளை ஏவி விடுகின்றனர். பா.ஜ.,வின் வீழ்ச்சி துவங்கி விட்டது,'' என்றார்.

