/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நிலுவை தொகையை வழங்காவிட்டால் போராட்டம்: ஒப்பந்ததாரர்கள் எச்சரிக்கை
/
நிலுவை தொகையை வழங்காவிட்டால் போராட்டம்: ஒப்பந்ததாரர்கள் எச்சரிக்கை
நிலுவை தொகையை வழங்காவிட்டால் போராட்டம்: ஒப்பந்ததாரர்கள் எச்சரிக்கை
நிலுவை தொகையை வழங்காவிட்டால் போராட்டம்: ஒப்பந்ததாரர்கள் எச்சரிக்கை
ADDED : மார் 03, 2026 06:26 AM
பெங்களூரு: நிலுவையில் உள்ள 37,000 கோடி ரூபாய் பில் தொகையை வழங்க வலியுறுத்தி, வரும், 6ம் தேதி முதல் மாநிலம் முழுதும் பணிகளை நிறுத்தி, போராட்டம் நடத்த ஒப்பந்ததாரர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக ஒப்பந்ததாரர்கள் சங்கத்தின் தலைவர் மஞ்சுநாத் நேற்று அளித்த பேட்டி:
கடந்த மூன்று ஆண்டுகளாக, அரசின் பல்வேறு துறைகள் சார்பில் ஒப்பந்ததாரர்கள் மேற்கொண்ட பணிகளுக்கு 37,000 கோடி ரூபாய் பாக்கி வர வேண்டியுள்ளது. இந்த அளவுக்கு பில் பாக்கி உள்ளதால், எங்களுக்கு கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
வீடு, தங்க நகைகளை அடமானம் வைத்து, கடன் வாங்கி பணிகளை நடத்தினோம். பல முறை வேண்டுகோள் விடுத்தும் நிலுவை தொகையை வழங்குவதில் முதல்வர் நடவடிக்கை எடுக்கவில்லை. அனைத்து மாவட்டங்களின் ஒப்பந்ததாரர்களும் பணிகளை செய்து விட்டு, பில் தொகைக்காக காத்திருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வரும், 5ம் தேதிக்குள் நிலுவை தொகையை வழங்காவிட்டால், 6ம் தேதி முதல் மாநிலம் முழுதும் பணிகளை நிறுத்தி, 25,000 முதல் 30,000 ஒப்பந்ததாரர்கள் ஒன்று சேர்ந்து பெங்களூரின் சுதந்திர பூங்காவில் போராட்டம் நடத்துவோம். மூன்று முறை நேரம் ஒதுக்கி தரும்படி கேட்டும், முதல்வர் சித்தராமையாவை சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
முந்தைய அரசை விட இந்த அரசில் பாக்கி தொகை அதிகரித்துள்ளது. ஒப்பந்ததாரர்கள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். அரசு உடனடியாக பாக்கி தொகையை வழங்க வேண்டும். பணிகளை நிறுத்துவதாக, இரண்டு மாதங்களுக்கு முன்பே கூறியும், இதுவரை ஒப்பந்தாரர்களுடன் பேச்சு நடத்த அரசு அழைக்கவில்லை.
ஏற்கனவே அனைத்து மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் செய்து ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை நடத்தி, ஒருமித்த கருத்து பெறப்பட்டது. வரும், 6ம் தேதி முதல் மாநிலம் முழுதும் பணிகளை நிறுத்தி போராட்டம் நடத்துவோம்.
பல்வேறு பணிகள் நடக்கின்றன. இவற்றை பாதியில் நிறுத்தினால், பொது மக்களுக்கு தொந்தரவு ஏற்படும். இதற்கு அரசே நேரடி காரணம்.
இவ்வாறு அவர் கூறினார்.

