ADDED : மே 13, 2025 01:05 AM
ஆற்றில் மூழ்கிய இருவர்
யாத்கிர், வடகேராவின், குருசனகி கிராமத்தில் வசித்தவர்கள் ஷகீல், 18, மெஹபூப், 20. இவர்கள் நேற்று மதியம் நீச்சலடிக்கும் நோக்கில், பீமா ஆற்றுக்கு சென்றனர். ஆழமான பகுதியில் சென்றதால், வெளியே வர முடியாமல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். தகவலறிந்து அங்கு சென்ற போலீசார், உள்ளூர் மக்களின் உதவியுடன் இருவரின் உடல்களை வெளியே எடுத்தனர்.
* கார்களில் தீ
பெங்களூரின் வால்மீகி நகரில் சாலை ஓரத்தில் இரண்டு கார்கள் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை ஒரு காரில், திடீரென தீப்பிடித்தது. இது மற்றொரு காருக்கும் பரவியது. இவ்வழியாக சென்ற சிலர், இரண்டு கார்களும் தீப்பிடித்து எரிவதை பார்த்து, தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த தீயணைப்பு படையினர், கார்களில் தீயை கட்டுப்படுத்தினர்.
* மின்னல் தாக்கி இருவர் பலி
பெலகாவி, சவதத்தியின், ஹிட்டனகி கிராமத்தில் வசித்தவர்கள் கங்கவ்வா, கலாவதி. இவர்கள் நேற்று முன்தினம் நிலத்தில், கால்நடைகளுக்கு தீவனம் சேகரித்து கொண்டு, வீடு திரும்பும் போது மின்னல் தாக்கியதில், இரண்டு பெண்களும் உயிரிழந்தனர்.
* இளைஞர் தற்கொலை
பெங்களூரு ரூரல், ஹொஸ்கோட்டின், தேவஷெட்டிஹள்ளியில் வசித்தவர் பையேஷ், 28. இவர் வெளிநாட்டில் படிப்பை முடித்து, சமீபத்தில் சொந்த ஊர் திரும்பினார். நேற்று முன்தினம் இவர், வீட்டில் யாரும் இல்லாத போது துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார். இதற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை.
***