ADDED : பிப் 19, 2026 07:21 AM
தங்க மண் கலவை திருடிய 15 பேர் கைது
--------
* இம்மாதம் 6ம் தேதி, தங்கச் சுரங்க நிறுவனத்தின் பாதுகாப்பு காவலர் கஸ்துாரிராஜா, சுரங்க பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கார்த்திக், 30, ஷ்யாம் விஜய், 32, வேளாங்கண்ணி, 28, சவுந்தரி, 40, சுஜாதா, 33, மேரி, 28, ரிச்சர்ட், 27 ஆகிய 7 பேர், தங்கச் சுரங்க நிறுவனத்தின் கிப்பர்ட்ஸ் ஷாப்ட் வளாகத்தில் உள்ள இரும்புக் கம்பி வேலியை உடைத்து உள்ளே சென்று, அங்கு கிடந்த தங்க கலவை கொண்ட மண்ணை, மூட்டைகளில் அள்ளி சென்ற போது பிடிபட்டனர். அவர்கள் வைத்திருந்த 8 மூட்டைகளில் நிரப்பப்பட்ட 26,000 ரூபாய் மதிப்புள்ள தங்க கலவை மண், 5 இரும்புக் கொக்கிகள், 2 பிளாஸ்டிக் குடங்களை பறிமுதல் செய்தனர்.
இம்மாதம் 10ம் தேதி தங்கச் சுரங்க பாதுகாப்பு காவலர் சங்கர், கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது, ரஜனி, 27, மதன் குமார் என்ற மைக்கேல், 32, ஆனந்த், 42, ஆரோக்கியதாஸ், 37, ஜார்ஜ், 31, மைக்கேல், 28, சூர்யா, 25, ராஜி, 35 ஆகிய 8 பேர், கம்பி வேலியை உடைத்து உள்ளே நுழைந்து தங்க கலவை மண்ணை திருடியபோது கைது செய்யப்பட்டனர். இவர்கள் வசம் இருந்த 4 மூட்டைகளில் நிரப்பப்பட்ட 15,000 ரூபாய் மதிப்புள்ள தங்க மண் கலவை உட்பட சில பொருட்களை பறிமுதல் செய்தனர். இவர்கள் 15 பேரும் கைது செய்யப்பட்டனர்
***
ரூ.6.50 லட்சம் வழிப்பறி
7 பேர் கும்பல் கைது
பூதிகோட்டை போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட தும்மடூர் கிராமம் அருகே, ஜன., 9ம் தேதி இரவில், கொல்லஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த நவீன்குமார் என்பவர், இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அவரிடம் கத்தியை காண்பித்து மிரட்டி, 8 லட்சம் ரூபாய் பறிக்கப்பட்டது.
பூதிகோட்டை போலீசார், தனி போலீஸ் படை அமைத்து விசாரித்தனர். கொடகுர்கி கிராமத்தின் நாகராஜ், 29, குமாரசாமி, 36; பெங்களூரு ராஜாஜிநகர், சாமுண்டிநகர் ஜெகதீஷ், 37, விஜய், 29; பெங்களூரு ராஜாஜிநகர் ஜீவன், 27, தாசரஹொசஹள்ளி கிராமத்தின் ஹரிஷ்குமார், 32; சுனகல் கிராமம் ராஜேந்திரா, 28 ஆகிய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 6.50 லட்சம்- ரூபாய் ரொக்கம், நான்கு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
***
மாடுகள் திருடிய
வாலிபர் கைது
காமசமுத்திரம் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட தொட்டேரி கிராமத்தைச் சேர்ந்த வெங்கடரெட்டியின் நிலத்தில் மேய்ந்து கொண்டிருந்த 1,05 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இரு மாடுகள் திருடப்பட்ட வழக்கு தொடர்பாக, ஆந்திராவின் சித்துார் குடிப்பள்ளியின் எம்.சந்தோஷ் என்ற மஞ்சுநாத், 19 என்பவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில், ஆண்டர்சன்பேட்டை போலீஸ் நிலைய பகுதிகளில் குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என தெரியவந்தது. அவரிடமிருந்து, இரு மாடுகள், 1.10 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,060 அடி நீளமுள்ள போர்வெல் கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

