வாகன திருடர்கள் கைது
பெங்களூரின் பல்வேறு இடங்களில் துணி வியாபாரம் செய்தபடி வாகனங்கள் திருடிய முகமத் ராகீப், 26, ரபீக் பாஷா, 39, முகமது அஸ்கர், 39, ஆகியோரை, பானஸ்வாடி போலீசார் கைது செய்தனர். 5.50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 10 இரு சக்கர வாகனங்கள் மீட்கப்பட்டன.
மின்சாரம் தாக்கி மாணவி பலி
ராய்ச்சூர், சிந்தனுாரின், குரகுந்தா கிராமத்தில் வசித்த தனுஸ்ரீ, 11, இதே கிராமத்தில் அரசு பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்தார். நேற்று மதியம் இவரிடம் பாட்டிலை கொடுத்த ஆசிரியர், குடிநீர் பிடித்து வரும்படி கூறினார். மாணவியும் வாட்டர் பியூரிபையர் சுவிட்சை போட்ட போது, மின்சாரம் தாக்கியது. இவர் மருத்துவமனையில் உயிரிழந்தார்.
கிராம கணக்காளர் கைது
ஷிவமொக்காவின், சிக்கஜம்பூர் கிராமத்தில் வசிக்கும் ஜிக்ரியா பெய்க் என்பவர், தன் தந்தை உயிலின்படி, நிலத்தை பட்டா மாற்றி தரும்படி, கிராம பஞ்சாயத்தில் விண்ணப்பித்தார். பட்டா மாற்றம் செய்து கொடுக்க, 4 லட்சம் ரூபாய் லஞ்சமாக தரும்படி கிராம கணக்காளர் விட்டலா வலியுறுத்தினார். நேற்று மதியம் ஷிகாரிபுராவின், அரசு ஊழியர்கள் உணவகத்தில் முன் பணமாக 1 லட்சம் ரூபாய் பெறும் போது, லோக் ஆயுக்தா போலீசார் கையும், களவுமாக பிடித்தனர்.
கிணற்றில் மூழ்கி உயிரிழப்பு
உடுப்பி, குந்தாபுரா அருகில் உள்ள வடேராவில் வசித்தவர் நாகராஜ், 51. இவரது வீட்டு கிணற்றின் மோட்டார் பழுதடைந்தது. நேற்று மதியம் இதை பழுது பார்க்க கிணற்றில் இறங்கிய இவர், கால் தவறி நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

