10 கிலோ கஞ்சா பறிமுதல்
பங்காருபேட்டையின் ஹுனசனஹள்ளி கிராமம், சேலம் குடிசை பகுதிக்கு செல்லும் வழியில், கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடன், பங்காருபேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு ஒடிசா மாநிலம் கஞ்சம் மாவட்டத்தை சேர்ந்த நபீன் குமார் சாரீக், 42; முல்பாகல் தாலுகா
சந்தீப், 36, என்ற இருவர் டிராலி பெட்டியில், 10 கிலோ 320 கிராம் கஞ்சா வைத்திருந்தனர். அதன் மதிப்பு. 5.15 லட்சம் ரூபாய். அதனை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்தனர். இருவரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவிலில் திருட்டு
முல்பாகலின் பங்கவாடி கிராமத்தில் உள்ள வேணுகோபால சுவாமி கோவிலின் கதவை உடைத்து உள்ளே சென்று, சுவாமி சிலையில் இருந்த வெள்ளி ஆபரணங்கள், உண்டியல் போன்றவற்றை மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள், நங்கிலி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
செயின் பறிப்பு: 2 பேர் கைது
கோலாரின் வேம்கல் அருகேயுள்ள மத்தேரியை சேர்ந்த சாவித்திரியம்மா, 60 என்பவர், மல்லாண்ட ஹள்ளி கிராமத்திற்கு கடந்த, 18ம் தேதி மாலை சென்று கொண்டிருந்தார்.
அப்போது, மல்லாண்ட ஹள்ளி சாலையில் இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், அவரின் கழுத்தில் அணிந்திருந்த தாலிக்கொடியை பறித்து தப்பி ஓடினர். வேம்கல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். நேற்று சிட்லகட்டா தாலுகா, சவுடசந்திரா கிராமத்தை சேர்ந்த கஜேந்திரா, 32. மோகன், 23, என்ற இருவரை கைது செய்து, 50 கிராம் தங்கச்செயின், அதிலிருந்த 2.70 கிராம் தங்கத் தாலி, 2 குண்டு ஆகியவற்றுடன், அவர்களது இரு சக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர். நேற்று கோலார் நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
டெம்போ மோதி ஒருவர் பலி
முல்பாகல் தொரடி கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் , 29. இவர் முல்பாகல் தேசிய நெடுஞ்சாலை வழியாக தொரடி கிராமத்திற்கு இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பின்னால் வந்த டெம்போ வாகனம் மோதியதில், சம்பவ இடத்திலேயே சுரேஷ் பலியானார். இதுகுறித்து முல்பாகல் நகர போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் இறந்த சுரேஷுக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

