ADDED : ஏப் 15, 2026 03:17 AM
விபத்தில் மூவர் பலி
சாம்ராஜ்நகர், குண்டுலுபேட் தாலுகாவின், மல்லைய்யனபுரா கேட் அருகில் நேற்று மாலை சென்ற கார் மீது, லாரி மோதியது. இதில் காரில் இருந்த கேரளாவை சேர்ந்த ஆயிஷா நுாரி, 41, இவரது மகள் நுஹா, 18, சகோதரர் முகமது அஜீர், 35, ஆகியோர் உயிரிழந்தனர்.
தீமிதியில் இருவர் காயம்
மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவில் உள்ள, முத்து மாரியம்மன் கோவிலில், நேற்று காலை கரக திருவிழா நடந்தது. அப்போது கரகம் சுமந்து தீ மிதித்த குட்டப்பா குமார் கால் தவறி தீயில் விழுந்து காயம் அடைந்தார். இவரை காப்பாற்ற சென்ற அவரது சகோதரியும் காயமடைந்து, இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
தேங்காய் திருட்டு
பெங்களூரின், மஹாலட்சுமி லே - அவுட்டில், 'லட்சுமி தேவி லைஸ் கார்னர்' என்ற கடை உள்ளது. கடை முன், மூட்டையில் தேங்காய்கள் வைக்கப்பட்டிருந்தன. நேற்று அதிகாலை அங்கு வந்த ஒரு பெண், தேங்காய்களை திருடி சென்றார். இந்த காட்சி கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இவர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டு உள்ளது.
டாக்டர் மீது புகார்
பெங்களூரின் ஹெச்.எஸ்.ஆர்., லே - அவுட்டில் பிரபலமான தனியார் மருத்துவமனையில், இளம் பெண் கணக்காளராக பணியாற்றுகிறார். இவருக்கு அதே மருத்துவமனை டாக்டர் ராகேஷ் ஜெயபிரகாஷ் ஆபாச மெசேஜ் அனுப்பியும், பேசியும் தொல்லை கொடுத்தார். இளம்பெண் புகாரின்படி, விசாரணைக்கு ஆஜராகும்படி டாக்டர் ராகேஷ் ஜெயபிரகாஷுக்கு, போலீசார் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
ஒருவர் அடித்து கொலை
பெங்களூரு ரூரல் மாவட்டம், ஹொஸ்கோட் தாலுகாவின், தப்பகுன்டேஹள்ளியில் வசித்தவர் சிவசங்கர், 40. இவர் நேற்று முன் தினம் இரவு, வீட்டு முன் நின்று மொபைல் போனில் பேசியபடி நின்றிருந்தார்.
அங்கு வந்த மூன்று மர்மகும்பல், அவரை இரும்புத்தடியால் தாக்கிவிட்டு தப்பியோடினர். சம்பவ இடத்தில் அவர் உயிரிழந்தார். கொலையாளிகளை போலீசார் தேடுகின்றனர்.

