/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
விவசாயி குளத்தில் முதலை குட்டிகள் மீட்பு
/
விவசாயி குளத்தில் முதலை குட்டிகள் மீட்பு
ADDED : ஜூன் 11, 2025 11:30 PM

பெலகாவி: பெலகாவியில் விவசாயியின் நிலத்தில் உள்ள குளத்தில் 50க்கும் மேற்பட்ட முதலை குட்டிகளை, கிராமத்தினர் மீட்டு, வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
பெலகாவி மாவட்டம், அதானியின் தேவரதெரட்டி கிராமத்தில் அப்பாசாப் சத்யப்பா நாயக்காவுக்கு சொந்த விவசாய நிலம் உள்ளது.
இந்த நிலத்துக்கு தண்ணீர் பாய்ச்ச, குளம் அமைத்து உள்ளார். மழைநீர் இதில் சேகரிக்கப்பட்டு உள்ளது. சில மாதங்களுக்கு முன் இந்த குளத்தில் பெரிய முதலை இருப்பதை பார்த்து, அப்பாசாப் அதிர்ச்சி அடைந்தார். முதலை சென்றுவிடும் என்று எண்ணினார். ஆனால் செல்லவில்லை.
இந்நிலையில், குளத்தின் கரையில் வித்தியாசமான மணல் மேடு இருப்பதை அவ்வழியாக சென்றவர்கள் பார்த்தனர். அருகில் சென்று தோண்டியபோது, முதலை முட்டைகளில் இருந்து குட்டிகள் தென்பட்டன.
குழியை தோண்டத் தோண்ட, ஒவ்வொரு முதலை குட்டிகளாக வெளியே வந்தன. 50க்கும் மேற்பட்ட குட்டிகளை, கிராம மக்களே மீட்டனர். பின், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அங்கு வந்த வனத்துறை அதிகாரிகளிடம், விவசாயிகள், இப்பகுதியில் விவசாய நிலங்கள், கிணறு பகுதிகளில் முதலைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. விவசாயம் செய்ய செல்லவே பயமாக உள்ளது. எனவே, விவசாய நிலங்கள், கிணறுகள் அருகில் தென்படும் முதலைகளை மீட்டு, வேறு இடத்தில் விட வேண்டும் என்று கேட்டு கொண்டனர்.
கிராம மக்களால் மீட்கப்பட்ட முதலை குட்டிகள்.