ADDED : ஜூன் 10, 2025 02:22 AM

பெங்களூரு: ''பதப்படுத்தப்படும் உணவு, மனித உயிருக்கு ஆபத்தானது,'' என, மத்திய சுகாதார அமைச்சர் நட்டா கவலை தெரிவித்துள்ளார்.
இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம், பெங்களூரில் நேற்று உலக உணவு பாதுகாப்பு தினத்தை ஏற்பாடு செய்திருந்தது. மத்திய சுகாதார அமைச்சர் நட்டா பேசியதாவது:
உடல் பருமன் பிரச்னை, இப்போது அதிகரித்துள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் நடத்திய ஆய்வின்படி, 2008 ஆண்டு முதல் 2020ம் ஆண்டிற்குள் நகர்ப்புறங்களில் உடல் பருமன் 39.6 சதவீதம் அதிகரித்து இருப்பது தெரிய வந்துள்ளது.
கிராமப்புறங்களிலும் உடல் பருமன் பிரச்னை 23.1 சதவீதம் உயர்ந்துள்ளது. நம் உணவு பழக்க வழக்கம் மாறிவிட்டது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வதை கட்டுப்படுத்த வேண்டும். உத்தரகண்டில் சமையல் எண்ணெய் பயன்பாடு 10 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. உப்பு நுகர்வும் குறைக்கப்பட்டு இருக்கிறது. விழிப்புணர்வு மூலம் இது சாத்தியமானது.
உணவு பொருட்களில் சர்க்கரை, எண்ணெய் பயன்பாட்டை குறைக்க வேண்டும். இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பராம்பரிய, தானிய உணவுகளை உட்கொள்வதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவு, நம் உயிருக்கு ஆபத்தானது.
இவ்வாறு அவர் பேசினார்.
கர்நாடக மருத்துவ கல்வித்துறை அமைச்சர் சரண்பிரகாஷ் பாட்டீல் கூறுகையில், ''குழந்தைகள் மேற்கத்திய உணவு முறையில் ஈர்க்கப்படுகின்றனர். சுவை, நிறத்திற்காக உணவு பொருட்களில் ரசாயனம் சேர்க்கப்படுகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கின்றன,'' என்றார்.