
உடுப்பி மாவட்டம் என்றலே, அனைவருக்கும் மல்பே கடற்கரை, செயின்ட் மேரிஸ் தீவு தான் நினைவுக்கு வரும். ஆனால், அதே மல்பே கடற்கரையின் மேற்கு திசையில், 1.5 கி.மீ., தொலைவில் குட்டி தீவு உள்ளது. இந்த தீவில் பிதனுாரின் பசவப்பா நாயக்கா என்பவர், பல நுாற்றுாண்டுகளுக்கு முன் கோட்டையை கட்டி உள்ளார். இந்த தீவை, 'தரியா பஹாதுர்கத் தீவு' என்றும், 'தரியா பஹாதுர்கத் கோட்டை' என்றும் அழைக்கின்றனர்.
இத்தீவு குறித்து அறிந்தவர்கள் மட்டுமே இங்கு செல்கின்றனர். கோட்டை இருந்ததற்கான அறிகுறிகளாக சீரழிந்த குட்டிச்சுவர்கள் மட்டுமே உள்ளன. இந்த தீவில் மத்திய பகுதியில் ஒரு கலங்கரை விளக்கம் அமைந்து உள்ளது.
இங்கிருந்த கோட்டையில், பசவப்பா நாயக்கா புதையல்கள் குவித்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது. 18 ம் நுாற்றாண்டு மத்தியில், இந்த கோட்டையை, ஹைதர் அலி கைப்பற்றியதாக கூறப்படுகிறது. இந்த தீவு, 1.6 கி.மீ., அகலம் கொண்டது.
இங்கு மக்கள் அதிகளவில் செல்வதில்லை. இந்த தீவில் கலங்கரை விளக்கம் அமைந்து உள்ளது. இங்கு பெரும்பாலான படகுகள் வருவதில்லை. நீங்கள் செல்வதாக இருந்தால், ஒன்றுக்கு இரண்டு முறை உடுப்பி நகரில் யாரிடமாவது இந்த தீவுக்கு படகு சவாரி உள்ளதா என்று கேட்டு கொள்ளுங்கள்.
எப்படி செல்வது?@@
விமானத்தில் செல்வோர், மங்களூரு விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 48 கி.மீ., தொலைவில் உள்ள கடற்கரைக்கு பஸ், டாக்சியில் செல்லலாம். ரயிலில் செல்வோர், உடுப்பி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 10 கி.மீ., தொலைவில் உள்ள மல்பே கடற்கரைக்கு, பஸ், ஆட்டோ, டாக்சியில் செல்லலாம். பஸ்சில் செல்வோர், உடுப்பி பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 7 கி.மீ., தொலைவில் உள்ள மல்பே கடற்கரைக்கு, பஸ், ஆட்டோ, டாக்சியில் செல்லலாம்.
- நமது நிருபர் -

