ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட தேவகவுடா விருப்பம் காட்டவில்லை: குமாரசாமி பேட்டி
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட தேவகவுடா விருப்பம் காட்டவில்லை: குமாரசாமி பேட்டி
ADDED : ஜூன் 10, 2026 03:46 AM

மாண்டியா: ''ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட தேவகவுடா விருப்பம் காட்டவில்லை,'' என்று அவரது மகனான, மத்திய கனரக தொழில் துறை அமைச்சர் குமாரசாமி கூறியுள்ளார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட தேவகவுடா விருப்பம் காட்டாததால் தான் பேராசிரியர் நாகராஜை பா.ஜ., வேட்பாளராக அறிவித்துள்ளது.
ஆனால் இந்த விஷயத்தில் தேவகவுடாவுக்கு அநீதி இழைக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர்கள் கூறுகின்றனர். தேவகவுடா மீது அதீத அனுதாபம் காட்டுகின்றனர். பா.ஜ., - ம.ஜ.த., கூட்டணியில் பிளவை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்.
தேவகவுடா போராளி; அதிகார ஆசை கொண்டவர் இல்லை. சுயமரியாதைக்கு பாதிப்பு ஏற்பட்டதால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்தார்.
காங்கிரஸ் தலைவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா? காங்கிரஸ் ஆதரவுடன் ராஜ்யசபாவுக்கு தேவகவுடா செல்லவில்லை. அவரை எதிர்த்து போட்டியிட எதிர்க்கட்சி வேட்பாளருக்கு போதிய ஓட்டுகள் இல்லை. இதனால் தேவகவுடா தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் ஜமீர் அகமது கான் என்னுடன் தொடர்பில் இல்லை. காங்கிரஸ் தலைவர்கள் யாரும் என்னை தொடர்பு கொள்ளவில்லை. முன்னாள் முதல்வரான என்னிடமும் ஆலோசனை கேட்பதாக, முதல்வர் சிவகுமார் கூறியுள்ளார்.
குமாரசாமி இரண்டு முறை முதல்வராக இருந்து என்ன செய்தார் என்று, பல முறை என்னை விமர்சித்து உள்ளார்.
அவருக்கு நான் என்ன ஆலோசனை சொல்வது? சமூக வலைத்தளங்களில் பதிவிட அவருக்கு புகைப்படம் வேண்டும். இதனால் தலைவர்கள் வீடு தேடி செல்கிறார். எனக்கு எல்லாம் தெரியும். 'அதி வினயம் துர்த்த லட்சணம்' என்று கூறும் பழமொழி தான் சிவகுமார் விஷயத்தில் எனக்கு நினைவுக்கு வருகிறது.
எம்.எல்.சி., தேர்தலில் நாங்கள் வேட்பாளரை அறிவித்து உள்ளோம். பா.ஜ.,வில் இருந்து நீக்கப்பட்ட எம்.எல்.ஏ., பசனகவுடா பாட்டீல் எத்னால் ஆதரவையும் கேட்போம். எங்களால் முடிந்ததை செய்வோம். காங்கிரசிடம் பணம், அதிகார பலம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
