விலங்கு கழிவுகளை சாலையோரம் வீச வேண்டாம்: திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் அறிவுறுத்தல்
விலங்கு கழிவுகளை சாலையோரம் வீச வேண்டாம்: திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் அறிவுறுத்தல்
ADDED : மே 27, 2026 06:39 AM
பெங்களூரு: ''பக்ரீத் பண்டிகையின் போது, இறைச்சிக்காக பலியிடப்படும் விலங்குகளின் கழிவுகளை சாலையோரங்களில் வீச வேண்டாம்,'' என, பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது.
முஸ்லிம்களின் முக்கிய பண்டிகையான பக்ரீத், நாளை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, பெங்களூரில் இறைச்சி வியாபாரம் சூடு பிடித்து விட்டது. இறைச்சிக்காக ஆடு, மாடுகள் அதிகளவில் பலியிடப்படும். இதனால், விலங்கு கழிவுகளும் அதிகமாக சேரும்.
கழிவுகளை அகற்றுவது குறித்து, பெங்களூரு திடக்கழிவு மேலாண்மை நிறுவன தலைமை செயல் அதிகாரி ரமாமணி கூறியதாவது:
இம்முறை, 20 லட்சம் கிலோ அளவில் விலங்கு கழிவுகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இறைச்சி விற்பனையாளர்கள், மக்கள் என யாரும், சாலையோரங்களில் விலங்கு கழிவுகளை வீச வேண்டாம். இது தொடர்பாக சம்பந்தப்பட்டோருக்கு, ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
விலங்கு கழிவுகளை சாலையில் வீசுவதால் ஏற்படும் நோய்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. விலங்கு கழிவுகளை பிளாஸ்டிக் பைகளில் சேர்த்து வைத்து, குப்பை வாகனங்களில் கொடுக்க வேண்டும்.
சிவாஜி நகர், சாம்ராஜ்பேட்டை, புலிகேசி நகர், ஹெப்பால் பகுதிகளில் அதிகளவில் விலங்கு கழிவுகள் உருவாக வாய்ப்பு உள்ளது. இப்பகுதிகளில் கழிவுகளை சேகரிக்க கூடுதலாக பணியாட்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
சேகரிக்கப்பட்ட விலங்கு கழிவுகள் அறிவியல் பூர்வமாக அப்புறப்படுத்தப்படும். குப்பை தொட்டிகள் உள்ள பகுதிகளில் கிருமி நாசினி தெளிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
