ADDED : ஏப் 23, 2025 07:47 AM

பெலகாவி : பெலகாவி மாவட்டம், சவதத்தி தாலுகா அரசு மருத்துவமனையின் டாக்டர் சுரேஷ் ஹித்தலமனி. இவர் குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்.
தினமும் குடிபோதையில் மருத்துவமனைக்கு வருவார். தள்ளாடியபடியே நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பார்.
உயர் அதிகாரிகள் எச்சரித்தும், தன்னை திருத்திக் கொள்ளவில்லை. நேற்று காலை நபர் ஒருவரை, இதய பரிசோதனைக்காக குடும்பத்தினர் அழைத்து வந்தனர். அப்போது டாக்டர் சுரேஷ் ஹித்தலமனி, வழக்கம் போன்று குடிபோதையில் தள்ளாடியபடி, அவரை பரிசோதனை செய்ய முற்பட்டார்.
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், 'குடிபோதையில் நோயாளியை பரிசோதிக்க வேண்டாம்' என, வலியுறுத்தினர். ஆனால் டாக்டர் பொருட்படுத்தவில்லை. நிற்கவே முடியாமல் தள்ளாடியபடியே, நோயாளிக்கு பரிசோதனை செய்தார்.
டாக்டரை நோயாளியின் குடும்பத்தினர் கண்டித்தனர். அவர்களை சமாதானம் செய்த நர்ஸ், தானே நோயாளியை பரிசோதிப்பதாக கூறி, பரிசோதித்தார். குடிகார டாக்டர் மீது நடவடிக்கை எடுக்கும்படி, நோயாளிகளின் குடும்பத்தினர் வலியுறுத்தினர்.
