'ஹெல்மெட்' அணியாததால் கார் ஓட்டுநருக்கு 'அபராதம்'
'ஹெல்மெட்' அணியாததால் கார் ஓட்டுநருக்கு 'அபராதம்'
ADDED : செப் 13, 2026 11:13 PM
பெலகாவி: காரில் சென்றவருக்கு, ஹெல்மெட் அணியவில்லை என கூறி, 500 ரூபாய் அபராதம் விதித்த, போக்குவரத்து போலீசாரின் செயல், சர்ச்சையாகியுள்ளது.
பெலகாவி மாவட்டம், அதானி நகரில் வசிப்பவர் சுபாஷ் போஜனே. இவர் நேற்று முன் தினம், அதானி நகரின், அம்பேத்கர் சதுக்கம் வழியாக காரில் சென்று கொண்டிருந்தார். அங்கிருந்த, போக்குவரத்து கேமரா, சுபாஷ் போஜனே போக்குவரத்து விதியை மீறியதாக, போட்டோ எடுத்தது.
அடுத்த சில நிமிடங்களில், போக்குவரத்து போலீசாரிடம் இருந்து, சுபாஷ் போஜனேவுக்கு 'வாட்ஸாப் மெசேஜ்' வந்தது. அதில் ஹெல்மெட் இல்லாமல் பயணித்து, போக்குவரத்து விதிகளை மீறியதால், 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளதாக கூறப்பட்டிருந்தது. இதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
அவர் காரில் செல்வது, படத்தில் தெளிவாக தெரிந்தும், அதை கவனிக்காமல் இரு சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் பயணித்ததாக கூறி, அவருக்கு அபராதம் விதித்த, போக்குவரத்து போலீசாரின் செயல், சர்ச்சையாகியுள்ளது.
தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை. சுபாஷ் போஜனே வீடியோவில் பதிவு செய்து, சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். 'கார்' ஓட்டும் ஓட்டுநரும், ஹெல்மெட் அணிந்து, கார் ஓட்ட வேண்டுமா' என போலீசாரை கிண்டலாக கேள்வி எழுப்பியுள்ளனர்.
