ADDED : அக் 11, 2025 05:07 AM

உடுப்பி: உடுப்பி மாவட்ட எஸ்.பி., ஹிரிராம் சங்கர், கூடுதல் எஸ்.பி., ஹர்ஷா பிரயம்வதா, துணை எஸ்.பி., பிரபு ஆகியோர் முன்னிலையில் 15.21 லட்சம் ரூபாய் மதிப்புடைய போதைப்பொருள் தீயில் போட்டு அழிக்கப்பட்டது.
படுபித்ரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் 7.12 லட்சம் ரூபாய் மதிப்புடைய 9 கிலோ கஞ்சா; 8.09 லட்சம் ரூபாய் மதிப்புள்ள எம்.எம்.டி.ஏ., ஆகியவை அழிக்கப்பட்டன.
பின், மாவட்ட எஸ்.பி., ஹிரிராம் சங்கர் அளித்த பேட்டி:
பத்து வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 15.21 லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருட்கள் அழிக்கப்பட்டன. மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டத்தை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்.
கடந்த 15 நாட்களில், போதைப்பொருள் தொடர்பாக 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்த நடவடிக்கை தொடரும். போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.