/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உயர்கிறது மின் கட்டணம் ஏப்ரல் 1 முதல் அமல்?
/
உயர்கிறது மின் கட்டணம் ஏப்ரல் 1 முதல் அமல்?
ADDED : பிப் 21, 2026 04:34 AM
பெங்களூரு: நஷ்டத்தை காரணம் காட்டி, மின் கட்டணத்தை உயர்த்தும்படி, கே.இ.ஆர்.சி., என்ற கர்நாடக மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம், மாநில மின் விநியோக நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. அதனால், ஏப்ரல், 1ம் தேதி முதல் மின் கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில், உணவு தானியங்கள், காய்கறிகள், பால் விலை உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அதேபோல, மெட்ரோ ரயில் பயண கட்டணமும் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்நிலையில், விரைவில் மின் கட்டணத்தை உயர்த்த கே.இ.ஆர்.சி, தயாராகி வருகிறது.
மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகள், தனி நபர்கள், நிறுவனங்கள் ஆண்டுக் கணக்கில் மின் கட்டண பாக்கி வைத்துள்ளன. அந்த வகையில் நுாற்றுக்கணக்கான கோடி ரூபாய் மின் கட்டணம் வசூலாக வேண்டியுள்ளது.
அத்துடன் நிர்வாக செலவும், கடனுக்கான வட்டியும் அதிகரித்து, மின் விநியோக நிறுவனங்கள் அவதிப்படுகின்றன. இதையே கே.இ.ஆர்.சி.,யிடம் விவரித்து, யூனிட்டுக்கு, 67 பைசா அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என, வேண்டுகோள் விடுத்துள்ளன. இது தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படுகிறது.
பெங்களூரின், கே.இ.ஆர்.சி., மத்திய அலுவலகத்தில், பொதுமக்கள் கருத்து கேட்பு நடக்கிறது. பெஸ்காமின் கட்டண உயர்வு தொடர்பாக, கே.இ.ஆர்.சி., தலைவர் ரவிகுமார் தலைமையில் நேற்று நடந்த கூட்டத்தில், பெஸ்காம் நிர்வாக இயக்குநர் சிவசங்கர் உட்பட, உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
பெஸ்காமின் வரவு, செலவு, பொருளாதார இழப்பு, வரும் நாட்களில் எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து அதிகாரிகள் விவரித்தனர். இதை கேட்டறிந்த கே.இ.ஆர்.சி., அதிகாரிகள், கட்டண உயர்வு தொடர்பாக பொதுமக்களின் கருத்துகளை தெரிந்து கொண்ட பின்னரே, இறுதி முடிவு செய்யப்படும் என்று கூறியுள்ளனர்.
இருப்பினும், யூனிட்டுக்கு, 20 முதல் 30 பைசா வரை மின் கட்டணம் உயர்த்தப்படலாம். ஏப்ரல், 1 முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.

