ADDED : ஆக 13, 2025 04:32 AM
மைசூரு: தசராவுக்கு வந்துள்ள யானைகளுக்கு, இரண்டாவது நாளாக, நேற்றும் நடைப்பயிற்சி அளிக்கப்பட்டது.
ஜம்பு சவாரியில் பங்கேற்பதற்காக, அரண்மனைக்கு வந்து இரண்டு நாட்களே ஆன நிலையில், நேற்று முன்தினம் யானைகளின் எடை சரிபார்க்கப்பட்டது. அதை தொடர்ந்து, நடைப்பயிற்சி மேற்கொள்ளப்பட்டது.
இரண்டாவது நாளான நேற்று காலை அரண்மனை வளாகத்தில் இருந்து பன்னி மண்டபம் விளையாட்டு மைதானம் வரை, 4.8 கி.மீ., துாரம் வரை 'ஆடி அசைந்து' நடந்து சென்றன.
இதை பார்த்த குட்டீஸ்கள் உற்சாகத்தில் யானை... யானை... என சந்தோஷத்தில் கூச்சல் போட்டனர். பஸ்கள், வாகனங்களில் சென்றவர்கள் தங்கள் மொபைல் போனில் படம் பிடித்தனர்.
தினமும் காலை, மாலை நேரத்தில் யானைகள் நடைப்பயிற்சி மேற்கொள்ளும்போது, ஒரு பக்கத்தின் சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.
யானை பாகன்கள் கூறுகையில், 'வனப்பகுதியில் இருந்து நகருக்கு வந்துள்ளதால், முகாமில் என்ன சாப்பிட்டு வந்ததோ அதுவே, இங்கும் கொடுக்கப்பட்டு வருகிறது. திடீரென சத்தான உணவு வழங்கினால், அவற்றுக்கு ஒவ்வாமை ஏற்படும்.
'எனவே, தற்போது யானைகளுக்கு இலைகள், புற்கள், ஆலமரத்தின் இலை, நெற்பயிர், வெல்லம், கொப்பரை தேங்காய் ஆகியவை மட்டுமே உணவாக வழங்கப்படுகின்றன. யானைகளின் உடல் நிலையை பொறுத்து சத்துணவு கொடுக்க ஆரம்பிக்கப்படும்' என்றனர்.
