உல்லாசமாக பொழுதுபோக்க ஜோம்லு அருவிக்கு செல்லலாம்!
உல்லாசமாக பொழுதுபோக்க ஜோம்லு அருவிக்கு செல்லலாம்!
ADDED : செப் 17, 2026 03:10 AM

- நமது நிருபர் -: உடுப்பி மாவட்டத்தில், பல்வேறு சுற்றுலா தலங்கள், கடற்கரைகள் உள்ளன. இம்மாவட்டத்தில் உள்ள அழகான நீர்வீழ்ச்சிகளில், ஜோம்லு அருவியும் ஒன்றாகும். இது, இயற்கை ஆர்வலர்களை கவர்ந்திழுக்கிறது.
உடுப்பி மாவட்டம், ஹெப்ரியில் ஜோம்லு அருவி அமைந்துள்ளது. நண்பர்களுடன், குடும்பத்துடன் விடுமுறைகளை கொண்டாட, தகுந்த சுற்றுலா தலமாகும்.
சுற்றிலும் பசுமையான காட்சிகளுக்கு இடையே, இந்த அருவி உள்ளது. 20 அடி உயரத்தில் இருந்து, தண்ணீர் பாய்ந்து வருகிறது. இந்த இடத்துக்கு வரும் சுற்றுலா பயணியருக்கு, மறக்க முடியாத அனுபவத்தை அளிக்கிறது.
இது, சீதா ஆற்றில் இருந்து உருவான, இரண்டாவது அருவியாகும். முதலாவது அருவி, ஹாசனில் உள்ள கொட்லு அருவியாகும்.
ஜோம்லு அருவியில் குளித்தால், உடலுக்கும், மனதுக்கும் உல்லாசத்தை அளிக்கும். ஆனால், மழைக்காலத்தில் இங்கு வருவோர், மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மழைக்காலத்தில் நீரில் இறங்கவே கூடாது. ரத்தத்தை உறிஞ்சும் அட்டைப்பூச்சிகள் அதிகம் இருக்கும். பாறைக்கற்களும் பாசி பிடித்து வழுக்கும்.
ஜோம்லு அருவியில் இறங்கி விளையாடவும், குளிக்கவும் விரும்புவோர், மழைக்காலம் முடிந்த பின் வருவது நல்லது.
அருவி அருகில், கடைகள் ஏதும் இல்லை. எனவே இங்கு செல்லும் போது, குடிநீர், தின்பண்டங்கள் கொண்டு சென்றால், மாலை வரை நிம்மதியாக பொழுது போக்கிவிட்டு, மன நிறைவோடு திரும்பலாம்.
அருவியில் நீந்த வனத்துறை தடை விதித்துள்ளது. அதிக ஆழத்துக்கு செல்லாமல், அருவியை மட்டும் ரசித்துவிட்டு, இருள் சூழ்வதற்குள் அங்கிருந்து வெளியேற வேண்டும்.
மீன் பிடிக்க விரும்புவோர், துாண்டில் கொண்டு வரலாம். கண்ணுக்கு எட்டிய துாரம் வரை, பசுமையான மரங்கள், செடி, கொடிகள் சூழ்ந்த இனிமையான சூழ்நிலையில், மீன் பிடிப்பது புதிய அனுபவத்தை அளிக்கும்.
தசரா விடுமுறையில், உடுப்பியின் சுற்றுலா தலங்களுக்கு செல்ல திட்டமிட்டிருந்தால், ஜோம்லு அருவிக்கு செல்ல மறக்காதீர்கள்.
எப்படி செல்வது
உடுப்பியில் இருந்து, 399 கி.மீ., மங்களூரில் இருந்து 56 கி.மீ., சிக்கமகளூரில் இருந்து, 164 கி.மீ.,யில் உடுப்பி உள்ளது. உடுப்பியில் இருந்து, 46 கி.மீ., துாரத்தில் ஹெப்ரி உள்ளது. இங்கிருந்து 15 கி.மீ.,யில் ஜோம்லு அருவி உள்ளது. மாநிலத்தின் முக்கிய நகரங்களில் இருந்து, ஹெப்ரிக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. விமானத்தில் வருவோர், மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து வாடகை வாகனத்தில் அருவிக்கு செல்லலாம்.
அனுமதி நேரம்: காலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணி வரை. கட்டணம் எதுவும் இல்லை. அனுமதி இலவசம்.
அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: காபு கடற்கரை, கிருஷ்ணர் மடம், மல்பே கடற்கரை, சோமேஸ்வரா வன விலங்குகள் சரணாலயம்.
