/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
குடும்ப பிரச்னை தம்பதி தற்கொலை
/
குடும்ப பிரச்னை தம்பதி தற்கொலை
ADDED : மார் 10, 2026 05:50 AM

மாண்டியா: குடும்ப பிரச்னை யால் ஏற்பட்ட வாக்குவாதத்தால், தம்பதி தற்கொலை செய்து கொண்டனர். குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தது.
மாண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட் தாலுகாவின் ஜெயநகர் லே - அவுட்டில் வசித்தவர் தர்ஷன், 30. இவரது மனைவி திவ்யா, 25. தம்பதிக்கு இரண்டு வயதில் மகள் உள்ளார். தர்ஷன் கார் ஓட்டுநராக பணியாற்றினார்.
குடும்ப பிரச்னையால், தம்பதி இடையே அவ்வப்போது சண்டை நடப்பது வழக்கம். நேற்று காலை, 7:30 மணியளவில் வழக்கம் போல, இவர்களுக்குள் காரசார வாக்குவாதம் நடந்தது. மனம் வருந்திய திவ்யா, அறைக்குள் சென்று மின் விசிறியில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
சிறிது நேரத்துக்கு பின், அறைக்குள் சென்ற தர்ஷன், மனைவி தற்கொலை செய்து கொண்டதை பார்த்து, அதிர்ச்சி அடைந்தார். தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். அதற்கு முன் மகளை கொலை செய்யும் நோக்கில், கழுத்தை நெரித்ததில் குழந்தை சுய நினைவை இழந்தது. மகள் இறந்து விட்டதாக நினைத்த தர்ஷன், தன் மாமியார் வீட்டினருக்கு வீடியோ கால் செய்து நடந்ததை கூறிவிட்டு தானும் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திவ்யாவின் குடும்பத்தினர், தர்ஷனின் குடும்பத்தினர் அங்கு வந்து பார்த்த போது, இருவரும் இறந்து கிடப்பதை பார்த்து, போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பரிசோதித்த டாக்டர், குழந்தை உயிருடன் இருப்பதாக கூறி சிகிச்சை அளித்தார். தற்போது குணமடைந்து வருகிறது.
கே.ஆர்.பேட் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.

