கணினி உதிரிபாகங்கள் கடையில் திருடிய தந்தை - மகன் கைது
கணினி உதிரிபாகங்கள் கடையில் திருடிய தந்தை - மகன் கைது
ADDED : மார் 19, 2026 05:05 AM
கோவிந்தபுரா: வேலையில் இருந்து நிறுத்தியதால், கணினி உதிரிபாகங்கள் விற்பனை கடையில் திருடிய, தந்தை - மகன் கைது செய்யப்பட்டனர்.
பெங்களூரு, நாகவாரா டி சென்னையா லே - அவுட்டில் வசிப்பவர் ரகு. ஹெச்.ஆர்.பி.ஆர்., லே - அவுட்டில் கணினி உதிரிபாகங்கள் விற்பனை கடை நடத்துகிறார்.
கடந்த 6ம் தேதி இரவு கடையின் கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள், கல்லா பெட்டியில் இருந்த 2.40 லட்சம் ரூபாய் ரொக்கம், 80 லட்சம் ரூபாய் மதிப்பிலான கணினி உதிரிபாகங்களை திருடி சென்றனர்.
கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்த போது, திருட்டில் ஈடுபட்ட இருவரும் புர்கா அணிந்திருந்ததும், பைக்கில் தப்பி சென்றதும் தெரிந்தது. பைக் பதிவெண் மூலம் விசாரணை நடத்திய போலீசார், நாகவாரா சாணக்யா லே - அவுட்டில் வசிக்கும் ஹேமந்த், 22 என்பவரை நேற்று முன்தினம் கைது செய்தனர்.
விசாரணையில், ரகுவின் கடையில் தனது தந்தை மஞ்சுநாத், 48, உடன் சேர்ந்து திருடியதை ஒப்பு கொண்டார். மஞ்சுநாத்தும் கைது செய்யப்பட்டார். கைதான மஞ்சுநாத்தின் வீட்டில், ரகு ஆறு ஆண்டுகளுக்கு முன் வாடகைக்கு இருந்தார். இப்போது வேறு இடத்தில் வசிக்கிறார்.
முன்னாள் வீட்டு உரிமையாளரின் மகன் என்பதால், தனது கடையில் ஹேமந்த்தை வேலைக்கு சேர்த்தார். அவர் சரியாக வேலை செய்யாததால், கடந்த மாதம் வேலையில் இருந்து நிறுத்தினார். இதனால் ஏற்பட்ட கோபத்தில், ரகுவின் கடையில் தந்தை, மகன் திருடியது தெரிந்தது. திருடிய பணம், கணினி உதிரிபாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
