திருமணம் செய்து வைக்க தொந்தரவு குடிகார மகனை கொன்ற தந்தை கைது
திருமணம் செய்து வைக்க தொந்தரவு குடிகார மகனை கொன்ற தந்தை கைது
ADDED : ஜூன் 13, 2026 10:49 PM
சாம்ராஜ்நகர்: குடிகார மகனை, தந்தை வெட்டி கொலை செய்தார்.
சாம்ராஜ்நகர் மாவட்டத்தின், யரகன ஹள்ளி கிராமத்தில் வசிப்பவர் சித்தே கவுடா, 62. இவருக்கு மனைவி, மகள், மகன் உள்ளனர். மகளுக்கு திருமணம் முடிந்துள்ளது. மூத்த மகன் சித்தராஜு, 32, பல ஆண்டுகளாகவே குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர்.
கட்டட கட்டுமான கூலி வேலை செய்த சித்தராஜு, சம்பாதிக்கும் பணத்தை குடித்து அழிப்பார். தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து, தாய், தந்தைக்கு தொல்லை கொடுப்பார்.
சமீப நாட்களாக, தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி, பெற்றோரை நச்சரித்தார். ஆனால் இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதால், யாரும் பெண் கொடுக்கவில்லை.
குடிப்பழக்கத்தை நிறுத்தி விட்டால், பெண் பார்த்து திருமணம் செய்வதாக, பெற்றோர் கூறினர். சித்தராஜு திருந்தவில்லை.
நேற்று முன் தினம் இரவு, குடிபோதையில் வீட்டுக்கு வந்த அவர், தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி, பெற்றோரிடம் தகராறு செய்தார்.
வெறுப்படைந்த தந்தை சித்தேகவுடா,சிமென்ட் கல்லால் மகனின் தலையில், ஓங்கி அடித்தார். இதில் பலத்த காயமடைந்த சித்தராஜு, சம்பவ இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்து அங்கு வந்த தெரகனாம்பி போலீசார், சித்தே கவுடாவை கைது செய்தனர்.
இது குறித்து, சாம்ராஜ்நகர் எஸ்.பி., சசிதர் கூறியதாவது:
சித்தராஜு சரியாக வேலைக்கும் செல்வது இல்லை. தினமும் குடித்து வந்து, பெற்றோரிடம் தகராறு செய்வார். இவரது தங்கையை அதே ஊரில் உள்ள இளைஞருக்கு, திருமணம் செய்து வைத்துள்ளனர். 'தங்கைக்கு திருமணம் செய்தீர்கள். எனக்கு ஏன் திருமணம் செய்யவில்லை' என கேட்டு, பெற்றோரிடம் சண்டை போட்டு வந்தார்.
தன்னை தற்காத்து கொள்ள, சிமென்ட் கல்லால் தந்தை தாக்கியதில், மகன் இறந்தார். தந்தையை கைது செய்து விசாரிக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
