நிலத்தகராறில் மடாதிபதியை கொல்ல முயன்ற ஐவருக்கு வலை
நிலத்தகராறில் மடாதிபதியை கொல்ல முயன்ற ஐவருக்கு வலை
ADDED : ஜூலை 07, 2026 04:03 AM

சித்ரதுர்கா: நிலத்தகராறில் மடாதிபதி மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய, ஐந்து பேரை போலீசார் தேடுகின்றனர்.
சித்ரதுர்கா மாவட்டம், ஹிரியூர் தாலுகா ஐமங்களா கிராமத்தில், தலித் சமூகத்துக்கான சிவசரண ஹரலய்யா மடம் உள்ளது. இம்மடத்தின் மடாதிபதி பசவ ஹரலய்யா சுவாமி.
மடத்தின் நுழைவாயில் பகுதியில் நிலம் உள்ளது. இந்த நிலம் மடத்திற்கு சொந்தமானது என்று பசவ ஹரலய்யா கூறுகிறார்.
ஆனால் நிலம் தனக்கு சொந்தமானது என சித்தேஸ்வரா என்பவர் கூறி வருகிறார். இதனால் நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடக்கிறது.
நேற்று முன்தினம் இரவு மடத்திற்குள் அத்துமீறி நுழைந்த சித்தேஸ்வரா உட்பட ஐந்து பேர், பசவ ஹரலய்யா, அவரது கார் டிரைவர் பீம்ராஜ் ஆகியோரை சரமாரியாக தாக்கினர். இதுபற்றி புகார் அளிக்க இருவரும் ஐமங்களா போலீஸ் நிலையத்திற்கு சென்றனர்.
அங்கு அத்துமீறி நுழைந்த சித்தேஸ்வரா உட்பட ஐந்து பேரும், மீண்டும் பசவ ஹரலய்யா, பீம்ராஜ் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திவிட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினர்.
படுகாயம் அடைந்த இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீஸ் நிலையத்தில் தங்களுக்கு பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்று மடாதிபதி குற்றம்சாட்டினார். தங்கள் மீது நடந்த தாக்குதலை தடுக்காத போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார். இன்ஸ்பெக்டர் குட்டப்பா விசாரிக்கிறார்.
