ADDED : பிப் 26, 2026 06:28 AM

தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் இருந்து 25 கி.மீ., துாரத்தில் உள்ளது சசிஹித்லு கடற்கரை. கர்நாடகாவின் கடற்கரைகளில் ஒரு மறைக்கப்பட்ட ரத்தினம் என்று இதை கூறலாம். அழகு, அமைதியான சூழலுக்கு மட்டுமல்ல, நீர் சறுக்கு போட்டிகளுக்கும் பெயர் பெற்றதாகும். நீர் சறுக்கு விளையாட்டில் பங்கேற்பவர்களுக்கு ஏற்ற இடமாகும் .
இது கர்நாடகாவின் 'நீர் சறுக்கு விளையாட்டின் சொர்க்கம்' என்றும் அழைக்கப்படுகிறது. சசிஹித்லு கடலில், நவம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களுக்கு இடையில், சீரான அலைகள் காணப்படும்.
இது தவிர நந்தினி, ஷாம்பவி நதிகள் அரபிக்கடலில் சங்கமிக்கும் இடம், சுற்றுலா பயணியரை கவர்ந்திழுக்கும்.
இங்கு வெள்ளை மணல், தெளிவான நீல நீர் அடங்கிய சூழல் சுற்றுலா பயணியரை வரவேற்கும்; உள்ளூர்வாசிகள் வார இறுதி நாட்களில் பொழுதை கழிக்க செல்வர். சூரியன் மறையும் போது, சசிஹித்லு கடற்கரையில் உள்ள காட்சிகள் கண்கொள்ளா காட்சியாகும். கடற்கரை அமைதி மற்றும் இயற்கை அழகை வெளிப்படுத்தும்.
அதே வேளையில், பிரதான சாலையில் இருந்து சிறிது தொலைவில் இருப்பதால், கடற்கரையை அடைய சிறிது துாரம் நடக்க வேண்டும்.
கடற்கரையில் வசதிகள் குறைவாகவே உள்ளன. கடற்கரை அருகில் சிற்றுண்டி மற்றும் குளிர்பான கடைகள் என சிறிய கடைகள் மட்டுமே உள்ளன.
இப்பகுதி ஒதுக்குப்புறமாக இருப்பதால், மாலை வரை தங்குவதை தவிர்க்கலாம் அல்லது எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். இயற்கையின் அழகில் மூழ்க விரும்புவோருக்கு, சசிஹித்லு கடற்கரை ஒரு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.
செல்வது
ஏப்படி
விமானம்: மங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 25 கி.மீ., தொலைவில் உள்ள கடற்கரைக்கு பஸ், டாக்சியில் செல்லலாம். ரயில்: மங்களூரு சந்திப்பில் இறங்கி, அங்கிருந்து 23 கி.மீ., தொலைவில் உள்ள கடற்கரைக்கு பஸ், டாக்சியில் செல்லலாம். பஸ்: முல்கி பஸ் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து 3 கி.மீ., தொலைவில் உள்ள கடற்கரைக்கு ஆட்டோவில் செல்லலாம்.
- நமது நிருபர் -

