/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நகை கடையில் கொள்ளை; ராஜஸ்தானின் நால்வர் கைது
/
நகை கடையில் கொள்ளை; ராஜஸ்தானின் நால்வர் கைது
ADDED : பிப் 24, 2026 06:34 AM

துமகூரு: தங்க நகைக்கடைக்குள் புகுந்து கொள்ளையடித்த பின், வனப்பகுதிக்குள் ஒளிந்திருந்த கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
துமகூரு மாவட்ட எஸ்.பி., அசோக் அளித்த பேட்டி:
துமகூரு மாவட்டம், சிராவின், கள்ளம்பெள்ளா கிராமத்தில் 'ஜெகதாம்பா ஜுவெல்லரி' என்ற நகைக்கடை உள்ளது. நேற்று (நேற்று முன்தினம்) மதியம் 2:00 மணியளவில், கடைக்குள் நுழைந்த மர்ம கும்பல், கடை ஊழியர்கள் தினேஷ், நாச்சிதேவி ஆகியோரின் முகத்தில், மிளகாய் துாள் வீசி, வாயை அடைத்தனர்.
அதன்பின் கடையின் ஷெட்டரை மூடிவிட்டு, நகைகளை திருடி கொண்டு தப்பியோடினர். இது குறித்து, தகவலறிந்த கள்ளம்பெள்ளா போலீசார், மாவட்டத்தின் அனைத்து போலீஸ் நிலையங்களுக்கும் தகவல் அனுப்பி, கொள்ளையர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.
சிரா போலீசார், கொள்ளையர்கள் சென்ற பகுதியில் விரட்டியதால், அவர்களால் தப்பிக்க முடியாமல், சிரா அருகில் உள்ள மேகரஹள்ளி வனத்துக்குள் புகுந்தனர். போலீசார் இரவு முழுதும் தேடி அலைந்து, ராஜஸ்தானை சேர்ந்த அரவிந்த்குமார், துங்கார் சிங், மஹேந்திர சிங், மதுசிங் ஆகியோரை இன்று (நேற்று) கைது செய்தனர். 26 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கம், வெள்ளி நகைகள் மீட்கப்பட்டன.
இவ்வாறு அவர் கூறினார்.

