ADDED : மே 03, 2025 11:08 PM

சிக்கஜாலா:நைஜீரிய பெண்ணை கொன்ற வழக்கில் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார். கடனை திரும்ப கேட்டதால் ஏற்பட்ட தகராறில் தீர்த்துக்கட்டியது தெரிய வந்துள்ளது.
ஆப்பிரிக்காவின் நைஜீரியாவை சேர்ந்தவர் லோவேதா, 30. பெங்களூரு பன்னர்கட்டாவில் வசித்தார். கடந்த மாதம் 30ம் தேதி சிக்கஜாலா அருகே பெட்டதஹலசூரு பகுதியில் ஆள்நடமாட்டம் இல்லாத இடத்தில், லோவேதா இறந்து கிடந்தார்.
அவரது தலையில் பலத்த காயம் இருந்தது. அவரை யாரோ கொலை செய்து உடலை இங்கு வீசியது தெரிந்தது.
சந்தேகத்தின்பேரில் லோவேதாவின் ஆண் நண்பர்கள் இருவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அவர்களில் ஒருவரான சைமன்ஸ், 33, மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது. கிடுக்கிப்பிடி விசாரணையில் லோவேதாவை இரும்புக் கம்பியால் தலையில் அடித்துக் கொன்றதை ஒப்புக் கொண்டார். அவர் கைது செய்யப்பட்டார்.
லோவேதா, சைமன்ஸ் இடையே ஐந்து ஆண்டுகளாக நட்பு இருந்துள்ளது. சைமன்ஸ் கேட்கும்போது கடனாக லோவேதா பணம் கொடுத்துள்ளார். பல மாதங்கள் ஆகியும் கடனை திரும்பக் கொடுக்கவில்லை. இதனால் இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
கோபம் அடைந்த சைமன்ஸ், லோவேதாவை தீர்த்துக்கட்ட நினைத்தார். அதன்படி அவரை கடந்த 29ம் தேதி இரவு காரில் அழைத்துச் சென்றார். ஒரு இடத்தில் காரை நிறுத்தி தலையில் இரும்புக் கம்பியால் அடித்தார்.
உயிரிழந்த லோவேதா உடலை எடுத்துச் சென்று, பெட்டதஹலசூரில் வீசியதும் தெரிய வந்துள்ளது.
