ADDED : ஜூலை 01, 2026 08:21 AM

பெங்களூரு: ''கர்நாடகாவை 2028க்குள் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது,'' என முதல்வர் சிவகுமார் கூறி உள்ளார்.
பெங்களூரு கன்டீரவா மைதானத்தில் நேற்று சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினத்தையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. கர்நாடகா போலீசார் ஏற்பாடு செய்த விழாவில் முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
போதைப்பொருள் பழக்கத்தால் வரும் பக்க விளைவுகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மாணவர்களும், இளைஞர்களும் போதை பழக்கத்திற்கு அடிமையாகக் கூடாது. உங்கள் மனதையும், உடலையும் கட்டுப்பாட்டில் வைத்திருங்கள். மன உறுதியை இழக்காதீர்கள்.
முன்னாள் உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தலைமையில், மூன்று ஆண்டுகளில் 89 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. இதற்கு உறுதுணையாக இருந்த அனைத்து போலீசாருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகள்.
போதை பழக்கத்திற்கு அடிமையான பிள்ளைகளின் பெற்றோர், உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவும். அப்போது தான் உங்கள் பிள்ளைகளை காப்பாற்ற முடியும். போதைப்பொருள் கடத்தல் கும்பல் குறித்து ரகசிய தகவல்களை போலீசாருக்கு வழங்கும் நபர்களுக்கு வெகுமதி வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
கர்நாடகாவை 2028ம் ஆண் டிற்குள் போதைப்பொருள் இல்லாத மாநிலமாக உருவாக்குவதே இலக்காக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இதற்கு மாணவர், இளைஞர்கள், பெற்றோர் என அனைவரும் ஒத்துழைப் பு தர வேண்டும்.
பான் மசாலா, குட்காவில் போதைப்பொருள் கலப்பது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
