லால்பாக் பூங்கா அருகே சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட்டது
லால்பாக் பூங்கா அருகே சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட்டது
ADDED : செப் 11, 2026 02:48 AM
பெங்களூரு: பெங்களூரு சில்க் போர்டில் இருந்து ஹெப்பால் வரை, 17 கி.மீ., நீளத்துக்கு சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தை முதல்வர் சிவகுமார் அறிவித்தார். இதற்கான டெண்டரை, அதானி குழுமம் பெற்றுள்ளது.
இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, லால்பாக் பூங்கா அருகில் சுரங்கப்பாதை வெளியேற்றம் அமைக்கவும், இதற்காக லால்பாக்கில் ஆறு ஏக்கர் நிலத்தில் தற்காலிகமாக ஐந்து ஏக்கர் நிலமும், ஒரு ஏக்கர் நிரந்தரமாக எடுத்து கொள்ளவும் முடிவு செய்தது.
இதை அறிந்த பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து, லால்பாக் பூங்காவுக்குள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, அதிகாரிகளுடன் ஆலோசித்து முடிவெடுப்பதாக முதல்வர் சிவகுமார் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், லால்பாக் பூங்காவுக்கு இடையூறு ஏற்படாத வகையில், சுரங்கப்பாதை வெளியேறும் வழியை மாற்ற அரசு முடிவு செய்துள்ளது. சுரங்கப்பாதை வெளியேறும் வழியை அமைப்பதற்கு பொருத்தமான இடத்தை அடையாளம் காணும்படி, ஜி.பி.ஏ., அதிகாரிகளுக்கு சிவகுமார் உத்தரவிட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
