/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினருக்கு வீட்டுமனை வழங்கும் திட்டம்: அரசு ஒப்புதல்!
/
எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினருக்கு வீட்டுமனை வழங்கும் திட்டம்: அரசு ஒப்புதல்!
எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினருக்கு வீட்டுமனை வழங்கும் திட்டம்: அரசு ஒப்புதல்!
எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினருக்கு வீட்டுமனை வழங்கும் திட்டம்: அரசு ஒப்புதல்!
UPDATED : பிப் 14, 2026 06:44 AM
ADDED : பிப் 14, 2026 04:56 AM

முதல்வர் சித்தராமையா தலைமையிலான அமைச்சரவையில், எஸ்.டி., சமூகத்தை சேர்ந்த நாகேந்திரா, ராஜண்ணா ஆகியோர் அமைச்சரவையில் இருந்தனர். வால்மீகி மேம்பாட்டு ஆணைய முறைகேடு வழக்கில், நாகேந்திரா தன் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். கட்சியின் மூத்த தலைவர் ராகுலை விமர்சித்து பேசியதால், ராஜண்ணாவின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.
காலியாக உள்ள இரண்டு அமைச்சர் பதவிகளும், எஸ்.டி., சமூகத்தை சேர்ந்த மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கும் கொடுக்கப்படவில்லை. இதனால், அரசு மீது எஸ்.டி., சமூகம் அதிருப்தியில் உள்ளது.
இதுதவிர பா.ஜ., ஆட்சியில், எஸ்.சி., - எஸ்.டி., சமூகங்களுக்காக ஒதுக்கப்பட்ட 11,000 கோடி ரூபாய் நிதியை, வாக்குறுதி திட்டங்களுக்கு பயன்படுத்தியதாகவும், சித்தராமையா அரசு மீது குற்றச்சாட்டு உள்ளது.
சூப்பர் பட்ஜெட் இதனால், 2028 சட்டசபை தேர்தலில், எஸ்.சி., - எஸ்.டி., சமூக ஓட்டுகள் தங்களுக்கு கிடைக்காமல் போய் விடுமோ என, ஆளுங்கட்சி வட்டாரத்தில் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், எஸ்.டி., சமூகத்தை சேர்ந்த பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினருக்கு வீட்டுமனை வழங்கும் திட்டத்தை அரசிடம் முன்மொழிந்தார். இந்த திட்டத்திற்கு, நேற்று முன்தினம் சித்தராமையா தலைமையில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுகுறித்து தாவணகெரே ஹரிஹராவில் சதீஷ் ஜார்கிஹோளி நேற்று அளித்த பேட்டி:
எஸ்.சி., - எஸ்.டி., சமூகத்தினருக்கு, வீட்டுமனை வழங்கும் திட்டத்திற்கு, அமைச்சரவை ஒப்புதல் அளித்து உள்ளது மகிழ்ச்சி தருகிறது. பயன்பாட்டில் இல்லாத அரசு நிலங்களை அடையாளம் கண்டு, வீட்டுமனைகளாக மாற்றி, தகுதியானவர்களுக்கு வழங்குவோம். மார்ச், 6ம் தேதி முதல்வர் பட்ஜெட் தாக்கல் செய்கிறார். அப்போது, வீட்டுமனை வழங்குவது தொடர்பான அறிவிப்பு வெளியாகும்.
இம்முறை சூப்பரான பட்ஜெட் தாக்கலாகும் என்று, நாங்கள் எதிர்பார்க்கிறோம். அது, கண்டிப்பாக மாநிலத்தின் வளர்ச்சிக்கும் உதவும்.
சக்தி திட்டத்தின் கீழ், அரசு பஸ்களில் இலவச பயணம் செய்ய பெண்களுக்கு, ஸ்மார்ட் கார்டு வழங்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டது. இதில், எந்த குழப்பமும் வராது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள் வெளிநாடு செல்ல திட்டமிட்டது பற்றியும், சிவகுமார் முதல்வராக நேரம் கணிந்து விட்டதாக, எம்.எல்.சி., சன்னராஜ் ஹட்டிகோளி கூறியது பற்றியும் எனக்கு எதுவும் தெரியாது. முதல்வர் பதவி விவகாரத்தில், கட்சி மேலிடம் தான் முடிவு எடுக்க வேண்டும். அவர்கள் எடுக்கும் முடிவுக்கு நாங்கள் கட்டுப்படுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சமூக ஆதரவு சதீஷ் ஜார்கிஹோளி, சித்தராமையாவின் ஆதரவாளர். சித்தராமையாவுக்கு பின், அஹிந்தா எனும் ஒடுக்கப்பட்ட சமூகங்களின் தலைவராக சதீஷ் ஜார்கிஹோளி பார்க்கப்படுகிறார். முதல்வர் பதவி மீது கண் வைத்து உள்ள இவர், 2028 ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், முதல்வர் பதவி கேட்பேன் என்று பகிரங்கமாக கூறுகிறார்.
தனது சமூகத்தின் ஆதரவை முழுமையாக பெறவே, வீட்டுமனை வழங்கும் திட்டத்தை, அவர் கையில் எடுத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

