ADDED : ஜூலை 15, 2026 12:38 AM

பெங்களூரு: பெங்களூரு நகர போலீஸ் கமிஷனராக இருந்த தயானந்தா மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்தும் விடுவிக்கப்பட்டதால், அவர் மீதான விசாரணை முடித்து வைக்கப்பட்டது.
கடந்தாண்டு ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டியில், முதன் முறையாக பெங்களூரு அணி கோப்பையை வென்றது. இதையடுத்து, பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த பாராட்டு விழாவிற்கு முன்னதாக ஏற்பட்ட கூட்ட நெரிசலில், 11 பேர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் தொடர்பாக, அப்போது நகர போலீஸ் கமிஷனராக இருந்த தயானந்தா, மத்திய டி.சி.பி., சேகர், ஏ.சி.பி., பாலகிருஷ்ணா, இன்ஸ்பெக்டர் கிரிஷ் என நான்கு போலீசார் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். பின், நிர்வாக தீர்ப்பாயத்தின் மூலம் இதற்கு தடை உத்தரவு பெற்று, மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டனர்.
அதுபோல, தயானந்தா மீதான துறைசார் விசாரணை நடந்தது. அப்போது, அவர் தரப்பு வாதத்தையும், நிர்வாக துறையின் கருத்தையும் ஏற்றுக் கொண்ட மாநில அரசு, தயானந்தா மீதான அனைத்து குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார். அத்துடன், அவர் மீதான விசாரணை முடித்து வைக்கப்பட்டது.
