ADDED : மே 18, 2026 11:26 PM

பெங்களூரு: பெங்களூரில் கனமழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழைக்கு முந்தைய கோடை மழை பெய்து வருகிறது. வடமாவட்டங்களான விஜயபுரா, ராய்ச்சூர், யாத்கிர், கலபுரகி, கொப்பாலில் தினமும் மாலையில் கனமழை பெய்கிறது. இதனால் அங்கு பயிர்கள் சேதம் அடைந்ததுடன், வாழை மரங்களும் சாய்ந்து விழுந்து உள்ளன. பல இடங்களில் மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில், கிராமங்கள் இருளில் மூழ்கி உள்ளன. நேற்று மாலை தாவணகெரேயில் ஜரகட்டே கிராமத்தில் வயலில் ஆடு மேய்த்து கொண்டு இருந்த, அஜித், 19 என்பவர் மின்னல் தாக்கி இறந்தார். கலபுரகி சேடத்தில் மின்னல் தாக்கி நரசப்பா, 40 என்ற விவசாயி இறந்தார். அவர், மேய்ச்சலுக்கு அழைத்து சென்ற 40 ஆடுகளும் இறந்தன.
பெங்களூரில் சில நாட்களாக மழை இல்லாமல் இருந்தது. ஆனால் நேற்று மாலை 4:00 மணிக்கு திடீரென கனமழை பெய்தது. பேட்ராயனபுரா, பானஸ்வாடி, புலிகேசிநகர். கம்மனஹள்ளி, ஹொரமாவு, நாகபுரா, ராமமூர்த்திநகர், பசவனபுரா, பசவேஸ்வராநகர் , சிவாஜிநகர், ராஜாஜிநகர், கே.ஆர்.புரம், வித்யாரண்யபுரா, தொட்டபிதரகல்லு, பாகலுார், பிரேசர் டவுன் உள்ளிட்ட பகுதிகளில் மழை கொட்டி தீர்த்தது. சாலையில் மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது.
தாழ்வான சாலையில் தண்ணீர் தேங்கி நின்றது. சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த பைக், கார்களின் சைலன்சர்களுக்குள் தண்ணீர் புகுந்ததால் வாகனங்களை ஸ்டார்ட் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.
முக்கிய சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். அடுத்த 6 நாட்களும் மாநிலத்தின் பெரும்பாலான இடங்களில், இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக, வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது.
