கால்நடை மருத்துவ பணி முறைகேடு அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
கால்நடை மருத்துவ பணி முறைகேடு அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்
ADDED : ஆக 18, 2026 02:53 AM
பெங்களூரு: கால்நடை மருத்துவர் பணி நியமனத்தில் முறைகேடு நடந்ததாக எழுந்துள்ள வழக்கில், முன்ஜாமின் கேட்டு உயர் நீதிமன்றத்தில் கே.பி.எஸ்.சி., முன்னாள் தலைவர் சிவசங்கரப்பா சாகுகர், தாக்கல் செய்த மனு தொடர்பாக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
கர்நாடகாவில் கால்நடை மருத்துவர் பணி நியமனங்களில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டப்பட்ட, கே.பி.எஸ்.சி., எனும் கர்நாடக மாநில பொது கமிஷன் தலைவர் சிவசங்கரப்பா சாகுகர், சஸ்பெண்ட் செய்யப்பட்டார். சில அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இவ்வழக்கில் தன்னை கைது செய்யக்கூடும் என்ற அச்சத்தில் சிவசங்கரப்பா, முன்ஜாமின் கேட்டு, 52வது கூடுதல் நகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் கடந்த 11ம் தேதி மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், 'வழக்கில் உள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமானவை' என கூறி, மனுவை தள்ளுபடி செய்தது.
இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் அவர் மேல்முறையீடு மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், இதற்கு விளக்கம் அளிக்கும்படி கூறி, விசாரணையை இன்று ஒத்திவைத்தது.
