ஹெச்.ஐ.வி., பரிசோதனை கட்டாயமல்ல மாணவர்களுக்கு கட்டுப்பாட்டு மையம் அறிவிப்பு
ஹெச்.ஐ.வி., பரிசோதனை கட்டாயமல்ல மாணவர்களுக்கு கட்டுப்பாட்டு மையம் அறிவிப்பு
ADDED : ஆக 01, 2026 06:33 AM
பெங்களூரு: கர்நாடகாவில் கல்லுாரி மாணவர்களுக்கு, ஹெச்.ஐ.வி., பரிசோதனையை, சுகாதாரத்துறை கட்டாயமாக்கியுள்ளதாக, வெளியாகியுள்ள செய்தி, வெறும் வதந்தி என, கே.எஸ்.ஏ.பி.எஸ்., எனும் கர்நாடக மாநில எய்ட்ஸ் நோய் கட்டுப்பாட்டு சொசைட்டி தெரிவித்துள்ளது.
இது குறித்து, கே.எஸ்.ஏ.பி.எஸ்., இயக்குனர் பத்மா பசவந்தப்பா கூறியதாவது:
கர்நாடகாவில் சமீபத்தில் 7,000 மாணவர்களுக்கு ஹெச்.ஐ.வி., பாதிப்பு உள்ளதாக, வதந்தி பரவியுள்ளது.
இது ஆதாரமற்ற தகவல். இதையடுத்து, கல்லுாரி மாணவர்களுக்கு ஹெச்.ஐ.வி., பரிசோதனையை கட்டாயமாக்கி, சுகாதாரத்துறை உத்தரவிட்டதாக கூறப்படுவதும் உண்மையில்லை. ஹெச்.ஐ.வி., பரிசோதனையை கட்டாயமாக்குவது, சட்ட விரோதமாகும்.
இதற்கு பதிலாக, பொதுமக்கள் தாமாக முன் வந்து, ஹெச்.ஐ.வி., பரிசோதனை செய்து கொள்வது குறித்து, ஊடகங்கள் வழியாக, மாநில விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது.
இத்தகைய பரிசோதனையை கட்டாயமாக்கியதாக, சமூக வலைதளங்கள், நாளிதழ்களில் வெளியான செய்திகளில் உண்மையில்லை.
டேட்டிங் செயலிகள், ஆன்லைன் மூலமாக சந்தித்து கொள்வது போன்ற காரணங்களால், ஹெச்.ஐ.வி., அபாயத்தில் உள்ள நபர்களை, அடையாளம் காண்பது, எங்களுக்கு கஷ்டமாகிறது. ஏன் என்றால் இவற்றில் நபர்களின் முகவரிகள் தெரிவது இல்லை. அவர்களை கண்டுபிடிக்க எங்களால் முடியவில்லை.
எனவே, மக்கள் அபாயத்தை உணர்ந்து, எங்கள் மையங்களை தொடர்பு கொள்ள வேண்டும். விழிப்புணர்வு ஏற்படுத்துவது மட்டுமே, எங்களுக்கு உள்ள ஒரே வழியாகும்.
ஹெச்.ஐ.வி.,யை கட்டுப்படுத்த, கே.எஸ்.ஏ.பி.எஸ்., சார்பில், 'பிரேக் ப்ரீ' மொபைல் செயலி வழியாக, விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். நோய் அறிகுறி உள்ளதாக உணரும் நபர், இந்த செயலி மூலமாக, கேள்விகள் எழுப்பி தங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.
நோய் உள்ளவர்கள் எங்கள் மையத்துக்கு வந்து, சிகிச்சை பெறலாம். ஆனால் பரிசோதனை செய்து கொள்ளும்படி, நாங்கள் கட்டாயப்படுத்த முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.
