விறகு அடுப்பு பயன்படுத்தியதால் வீட்டை காலி செய்ய உத்தரவு
விறகு அடுப்பு பயன்படுத்தியதால் வீட்டை காலி செய்ய உத்தரவு
ADDED : மார் 30, 2026 04:32 AM
பேட்ராயனபுரா: சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டால், வாடகை வீட்டில் விறகு அடுப்பு பயன்படுத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்த வீட்டு உரிமையாளர், குடியிருப்பவரை வீட்டை காலி செய்ய உத்தரவிட்டுள்ளார்.
மேற்காசிய போர் பதட்டத்தால், உலகம் முழுதும் காஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் ஒரு சிலிண்டர் முன்பதிவு செய்தால், அடுத்த சிலிண்டர் 25 நாட்களுக்கு பின்னரே பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டு உள்ளது. இதனால், பலரும் மின்சார அடுப்புகளை வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூரு பேட்ராயனபுரா அஸ்வத் நகரில் வாடகை வீட்டில் குடியிருக்கும் குடும்பத்தினருக்கு, சமையல் காஸ் சிலிண்டர் தீர்ந்ததால், மாற்று சிலிண்டர் புக் செய்தனர். பல நாட்களாகியும் சிலிண்டர் வரவில்லை.
வேறு வழியில்லாததால், சமையல் அறையில் விறகு அடுப்பு வைத்து சமையல் செய்தனர். இந்த வீட்டின் கீழ்தளத்தில் வீட்டு உரிமையாளர் வசித்து வருகிறார். வாடகை வீட்டில் இருந்து அதிகளவில் புகை வருவதை கவனித்த உரிமையாளர், அங்கு சென்று விசாரித்தார்.
அப்போது, காஸ் சிலிண்டர் தீர்ந்ததால், விறகு அடுப்பு பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். இதனால் கோபமடைந்த உரிமையாளர், 'சமையலுக்கு விறகு பயன்படுத்துவதால், வீட்டின் பெயின்டிங்கை பாதிப்பதுடன், சுவர்கள் கருப்பு நிறமாக மாறும். விறகு அடுப்பு பயன்படுத்த வேண்டாம் என்று கூறியும், பயன்படுத்தி உள்ளீர்கள். எனவே, வீட்டை காலி செய்யுங்கள்' என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.
வாடகைக்கு குடியிருக்கும் பெண் கூறுகையில், 'சமையல் செய்ய எங்களுக்கு காஸ் கிடைக்காததால், விறகு அடுப்பை பயன்படுத்துகிறோம். ஆனால் எங்கள் சூழ்நிலையை புரிந்து கொள்ளாத வீட்டு உரிமையாளர், வீட்டை காலி செய்யும்படி கூறுகிறார். காஸ் கிடைக்காததால், எங்கள் குடும்பத்தினர் பட்டினி கிடக்க வேண்டுமா' என, கேள்வி எழுப்பி உள்ளார்.
