மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற காதல் கணவர் கைது
மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற காதல் கணவர் கைது
ADDED : ஜன 14, 2026 03:58 AM

ஷிவமொக்கா: இரண்டாவது திருமணம் செய்வதற்காக, முதல் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது செய்யப்பட்டார்.
ஷிவமொக்கா மாவட்டம், பத்ராவதியின் பந்தரஹள்ளியை சேர்ந்தவர் கோபி, 28, டி.பி., கிராமத்தை சேர்ந்தவர் சந்தனாபாய், 25.
இருவரும் ஒரே பள்ளியில் படித்தவர்கள். அப்போதே காதலித்தனர்.
இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், திருமணத்துக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் ஆறு ஆண்டுகளுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறிய இருவரும், திருமணம் செய்து கொண்டனர். இருவருக்கும் இரு மகன்கள் உள்ளனர்.
சமீபகாலமாக கிளப்களுக்கு செல்வதை கோபி பழக்கமாக்கி கொண்டார். அங்குள்ள பெண்களுடன் இவருக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது மட்டுமின்றி, அவர்களின் பெயர்களையும், தனது உடலில் பச்சை குத்தி கொண்டுள்ளார்.
இதை பார்த்த சந்தனாபாய், கேள்வி எழுப்பினார். இதனால் கோபம் அடைந்த கோபி, 'நான் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன். இதற்கு ஒப்புக் கொள்ள வேண்டும்' என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக கடந்த 11ம் தேதி சந்தனாபாயுடன் பேச வேண்டும் என்பதற்காக, அவரின் சகோதரியுடன், தனது இரு மகன்களையும் கோபி வலுக்கட்டாயமாக வெளியே அனுப்பி வைத்தார்.
பின் திருமணம் தொடர்பாக ஏற்பட்ட சண்டையில், சந்தனாபாயின் கழுத்தை நெரித்து கொ லை செய்தார்.
தகவல் அறிந்த ஹொலேஹன்னுார் போலீசார், கோபியை கைது செய்தனர்.
இவர், ஏற்கனவே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, 'போக்சோ' வழக்கில் சிறையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.
மற்றொரு சம்பவம் ஹாசன் மாவட்டம், ஆலுார், யடூர் கிராமத்தை சேர்ந்தவர்கள் குமார், 45, - ராதா, 40, தம்பதி. மனைவியின் நடத்தையில் குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டதால், எட்டு ஆண்டுகளாக கணவரை பிரிந்து, ராதா தனியாக வசித்து வருகிறார்.
இம்மாதம் முதல் வாரத்தில் குமார் இருமுடி கட்டி, சபரிமலைக்கு சென்றார். அப்போது, அவருக்கு மனைவி ஸ்தானத்தில் வேறொரு பெண் பாதபூஜை செய்துள்ளார். குமார் சபரிமலையில் இருந்து திரும்பினார். இதை கேள்விப்பட்ட ராதா, கடந்த 10ம் தேதி குமாரிடம் சென்று நியாயம் கேட்டார்.
அப்போது இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. கோபத்தில் மனைவியின் கன்னத்தில் குமார் அறைந்தார். கீழே விழுந்த அவர், உயிரிழந்தார். அதிர்ச்சி அடைந்த குமார், நள்ளிரவு 12:00 மணியளவில் ராதாவின் உடலை, பிளாஸ்டிக் காகிதத்தில் சுற்றினார். தனது பைக்கில் வைத்து, யகச்சி ஆற்றில் வீசிவிட்டு சென்றுவிட்டார்.
நேற்று முன்தினம் ஆலுார் போலீசாருக்கு குமார் தகவல் தெரிவித்தார். இதையடுத்து ஆற்றில் கரை ஒதுங்கிய ராதாவின் உடலை போலீசார் மீட்டு, பரிசோதனைக்கு அனுப்பினர்.
குமாரை கைது செய்து விசாரிக்கின்றனர்.
