/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பாதரசத்தை உடலில் செலுத்தி மனைவியை கொன்ற கணவர்
/
பாதரசத்தை உடலில் செலுத்தி மனைவியை கொன்ற கணவர்
ADDED : நவ 25, 2025 06:06 AM

அத்திப்பள்ளி: ஊசி மூலம் உடலில் பாதரசத்தை செலுத்தி, மனைவியை கொன்ற கணவர் மீது வழக்குப் பதிவாகி உள்ளது.
பெங்களூரு ரூரல் அத்திப்பள்ளியை சேர்ந்தவர் பசவராஜ், 33. இவரது மனைவி திவ்யா, 30. ஒன்றரை வயதில் ஆண் குழந்தை உள்ளது. திருமணம் முடிந்த மூன்று மாதங்களில் வரதட்சணை கேட்டு மனைவியை, கணவர் துன்புறுத்த ஆரம்பித்துள்ளார்.
'நீ கறுப்பாக இருக்கிறாய், உன்னை எனக்கு பிடிக்கவில்லை, உன்னுடன் வாழ மாட்டேன்' என, திவ்யாவிடம், பசவராஜ் கூறி வந்துள்ளார்.
கடந்த பிப்ரவரியில், திவ்யாவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பெற்றோர் வீட்டிற்கு கணவர் அனுப்பினார். நாளடைவில் திவ்யாவின் உடல் எடை குறைந்து கொண்டே சென்றது. இரண்டு மாதங்களாக அவரது உடல்நிலை மோசம் அடைந்தது.
ஆனேக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் இருந்து ரத்த மாதிரியை எடுத்து, பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 22ம் தேதி கிடைத்த அறிக்கையில், திவ்யாவின் உடலில் பாதரசத்தை ஊசி மூலம் செலுத்தியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் தனியார் மருத்துவமனையில் இருந்து விக்டோரியா அரசு மருத்துவமனைக்கு திவ்யா மாற்றப்பட்டார். 'என் உடலில் ஊசி மூலம் பாதரசம் செலுத்திய கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அத்திப்பள்ளி போலீசாரிடம் திவ்யா வாக்குமூலம் அளித்தார்.
அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் நேற்று காலையில் உயிரிழந்தார்.
திவ்யா வாக்குமூலத்தின் அடிப்படையில், பசவராஜ் மீது அத்திப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக உள்ள அவரை தேடி வருகின்றனர்.

