/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
புரட்டி எடுத்த மனைவி: விஷம் குடித்த கணவர்
/
புரட்டி எடுத்த மனைவி: விஷம் குடித்த கணவர்
ADDED : செப் 04, 2025 03:29 AM
சிக்கபல்லாபூர்: மனைவியின் அடி, உதை தாங்க முடியாமல், விஷம் குடித்த கணவர், மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.
சிக்கபல்லாபூர் நகரின், கவுடகெரே கிராமத்தை சேர்ந்தவர் ராமாஞ்சனப்பா, 32. இவரது மனைவி அருணா, 27. சில ஆண்டுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் நடந்தது. ராமாஞ்சினப்பா குடிப்பழக்கத்துக்கு அடிமையானவர். தினமும் குடிபோதையில் வீட்டுக்கு வந்து, மனைவிக்கு தொந்தரவு கொடுத்தார்.
குடிப்பதை நிறுத்தும்படி, குடும்பத்தினர் புத்திமதி கூறியும் பயன் இல்லை. மனைவியும் கணவரை திருத்த அதிகபட்சம் முயற்சித்தும், முடியவில்லை.
பொறுமை இழந்த அருணா, தினமும் கணவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்தால், கையில் கிடைத்த பொருட்களை கொண்டு, கண் மூடித்தனமாக அடிக்கத் துவங்கினார்.
தினமும் மனைவியிடம் அடி வாங்கியதால், ராமாஞ்சனப்பா விரக்தி அடைந்தார். குடிப்பழக்கத்தையும் அவரால் விட முடியவில்லை. எனவே தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். நேற்று காலை பைக்கில் புறப்பட்ட அவர், ஷெட்டிகெரே கிராஸ் வனப்பகுதிக்கு சென்று, விஷம் குடித்தார். சாலை ஓரத்தில் விழுந்து கிடந்தார்.
அந்த வழியாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பரேசந்திரா போலீஸ் நிலைய எஸ்.ஐ., ஜெகதீஷ் ரெட்டி, சாலையில் விழுந்து கிடந்த ராமாஞ்சனப்பாவை, தோளில் சுமந்து சென்று, சிக்கபல்லாபூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தார். அவரது குடும்பத்தினருக்கும் தகவல் கொடுத்தார்.
கணவர் விஷம் குடித்ததை அறிந்து, மருத்துவமனைக்கு ஓடி வந்த அருணா, கணவரின் உயிரை காப்பாற்றும்படி, டாக்டர்களிடம் மன்றாடுகிறார்.
'இனி அடிக்க மாட்டேன். கணவர் உயிரோடு இருந்தால் போதும்' என, அருணா புலம்புகிறார்.