ADDED : செப் 06, 2026 11:17 PM

- நமது நிருபர் -
பெங்களூரின், பி.டி.எம்., லே - அவுட் சட்டசபை தொகுதியின், காங்கிரஸ் தலைவியும், சமூக சேவகியுமான கவிதா ஸ்ரீநாத்துக்கு, சர்வதேச அளவிலான, 'ஷி பார் தி நேஷன்' விருது கிடைத்துள்ளது. கொழும்புவில் உள்ள இலங்கை பிரதமரின் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில், அவருக்கு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.
இலங்கை நாட்டில், 'எனி ஹெல்ப் குரூப்ஸ்' என்ற அமைப்பு சார்பில், ஷீ பார் தி நேஷன் என்ற விருது வழங்கப்படுகிறது. இது, சர்வதேச அங்கீகாரம் பெற்ற விருதாகும். உலகம் முழுவதும் தொழில் முனைவோர், சமூக சேவை உட்பட, பல்வேறு துறைகளில் சாதனை செய்யும் பெண்களை அடையாளம் கண்டு, இந்த விருது வழங்கப்படுகிறது.
மிகவும் உயரிய விருதுக்கு, நடப்பாண்டு, பி.டி.எம்., லே - அவுட் காங்கிரஸ் தலைவியும், சமூக சேவகியுமான கவிதா ஸ்ரீநாத் தேர்வு செய்யபட்டுள்ளார்.
விருது கோரி, உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து, 3,500க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டன, இதில் கவிதாவின் சமூக சேவையை கவனித்து, தேர்வு கமிட்டி, விருதுக்கு அவரை தேர்வு செய்தது.
இலங்கையின், கொழும்புவில் உள்ள அந்நாட்டின் பிரதமரின் இல்லத்தில், சமீபத்தில் நடந்த விழாவில், அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, மலேஷியா, உக்ரைன், ஸ்லோவேனியா, நேபாளம் உட்பட, பல்வேறு நாடுகளின் சாதனை பெண்களுடன், இந்திய பிரதிநிதியாக கவிதா ஸ்ரீநாத் விருது பெற்றார்.
இது தொடர்பாக, கவிதா ஸ்ரீநாத் கூறியதாவது:
சிறு வயதில் இருந்தே, எனக்கு சமூக சேவையில் ஆர்வம் அதிகம். கொரோனா நேரத்தில், தொடர்ந்து, 85 நாட்கள் தினமும் 3,000க்கும் மேற்பட்டோருக்கு, இலவச உணவு பொட்டலங்கள் வழங்கினேன். ஆயிரக்கணக்கான ஏழை குடும்பங்களுக்கு, ரேஷன் பொருட்கள் வழங்கினேன்.
ஏழைகளுக்கு தற்காலிகமாக உதவுவதை விட, பெண்கள் மற்றும் ஏழைமக்கள் யாரையும் சார்ந்திராமல், தன்மானத்துடன் வாழ்க்கை நடத்த, தேவையான பயிற்சி, வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தி தருவது முக்கியம்.
இதற்காக பல திட்டங்களை செயல்படுத்தியுள்ளேன். ஷி பார் தி நேஷன் விருதுடன், 'சவுத் இந்தியா வுமன் அச்சீவர்ஸ்' விருதுக்கும், நான் தேர்வு செய்யப்பட்டுள்ளேன். செப்டம்பர் 27ம் தேதியன்று, சென்னையில் நடக்கவுள்ள விழாவில், விருது பெறவுள்ளேன். இத்தகைய விருதுகள், என் பொறுப்பை மேலும் அதிகரிக்க செய்துள்ளது. எனக்கு கிடைத்த விருதுகளை, சமுதாயத்தில் கஷ்டப்பட்டு முன்னேறும் ஒவ்வொரு சாதனை பெண்களுக்கும், நான் அர்ப்பணிக்கிறேன். ஏழைகளுக்காக என் உயிர் உள்ளவரை சேவை செய்வேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
