/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற கட்டிகள்ளு 'வியூ பாயின்ட்'
/
இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற கட்டிகள்ளு 'வியூ பாயின்ட்'
இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற கட்டிகள்ளு 'வியூ பாயின்ட்'
இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற கட்டிகள்ளு 'வியூ பாயின்ட்'
ADDED : ஜன 08, 2026 05:38 AM

- நமது நிருபர் -
'காபி நாடு' என்று அழைக்கப்படும் சிக்கமகளூரில், இயற்கை ஆர்வலர்களுக்கு ஏற்ற இடம் கட்டிகள்ளு வியூ பாயின்ட்.
சிக்கமகளூரு மாவட்டம், துர்கதஹள்ளி கிராமத்தில் அமைந்து உள்ளது, கட்டிகள்ளு வியூ பாயின்ட். மேற்கு தொடர்ச்சி மலையில் பல்லாலராயனதுர்கா கோட்டை அருகில் அமைந்து உள்ளது.
இரு சக்கர வாகனம், கார்களில் செல்வோர், செல்லும் வழியில் இயற்கை அழகை ரசித்தபடி செல்லலாம். செல்லும் வழியில் சிறிய நீர்வீழ்ச்சியை காண முடியும். இங்கு குளிக்க வாய்ப்பில்லை. ஆனால், வாகனத்தை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு, புகைப்படம் எடுத்து கொள்ளலாம்.
அங்கிருந்து மீண்டும் நம் பயணத்தை துவக்கி சிறிது துாரம் சென்றால், மிகப்பெரிய காபி எஸ்டேட் அமைந்து உள்ளது. இங்கும் வாகனத்தை நிறுத்தி விட்டு, புகைப்படம் எடுத்து மகிழலாம். அங்கிருந்து புறப்பட்டு, துர்கதஹள்ளி கிராமத்தை அடையலாம். அங்கு வாகனத்தை நிறுத்தி விட்டு, காலபைரேஸ்வரா கோவிலில் இருந்து 4 கி.மீ., துாரம் மலையேற்றத்தை துவக்கலாம்.
மலைப்பாதையில் ஏறும் போது, அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்ல வேண்டும். அதனை தாண்டி செல்லும் போது சிறு சிறு ஓடைகளை காண்பீர்கள். அதனை தொடர்ந்து செல்லும் போது, வெட்டவெளி பகுதி தென்படும். அங்கிருந்து பார்த்தால், 600 அடி உயரத்தில் ஒற்றை கல்லில், கட்டிகள்ளு வியூ பாயின்ட் தெரியும்.
குளிர்காலத்தில் நீங்கள் செல்லும் போது, மேகமூட்டம், வியூ பாயின்டை தொட்டு செல்வதை பார்க்கலாம். அங்கிருந்து வியூ பாயின்ட் செல்ல, மீண்டும் அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்ல வேண்டும். வியூ பாயின்ட் சென்றடைந்ததும், அங்கிருந்து பல்லாலராயனதுர்கா கோட்டை மற்றும் ராணி ஜாரி வியூ பாயின்டை காணலாம்.
நவம்பர் முதல் மே மாதங்களில் இங்கு செல்வது நல்லது. தேவையான உணவு, குடிநீர் எடுத்து கொள்ள வேண்டும். காலை 6:00 மணிக்கு புறப்பட்டு, மாலை 6:00 மணிக்குள் திரும்பிவிட வேண்டும்.

