கர்நாடகா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த கேசவமூர்த்தி
கர்நாடகா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த கேசவமூர்த்தி
ADDED : மே 03, 2026 02:40 AM

மைசூரு மாவட்டம் ஹுன்சூர் டவுனில் வசிப்பவர் பி.கே.கேசவமூர்த்தி, 72. ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல்., ஊழியர். இந்தியா மற்றம் வெளிநாடுகளின் பழங்கால நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தபால் தலைகளை சேகரித்து வைத்து, பள்ளி, கல்லுாரி மாணவர்கள் இலவசமாக கண்டு ரசிக்க, 175 க்கும் மேற்பட்ட இலவச கண்காட்சிகளுக்கு ஏற்பாடு செய்ததால், கேசவமூர்த்தியின் பெயர் தற்போது கர்நாடகா சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து கேசவமூர்த்தி கூறியதாவது:
பள்ளியில் படிக்கும் நாட்களில் இருந்தே, எனக்கு பழங்கால நாணயங்களை சேகரிக்கும் பழக்கம் இருந்தது. கல்லுாரி நாட்களில் அது தொடர்ந்தது. பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த பின், குடகின் மடிகேரியில் பணியாற்றினேன்.
அங்கு என்னுடன் வேலை செய்த சில நண்பர்கள் உதவியுடன், மாநிலத்தின் பல மாவட்டங்களுக்கு சென்று, பழங்கால நாணயங்களை சேகரிக்க ஆரம்பித்தேன். நான் சேகரித்த நாணயங்களை வெளி உலகிற்கு கொண்டு வர வேண்டும் என்று, நண்பர்கள் நண்பர்கள் கூறினர்.
இதனால், 1992ல் குடகின் மடிகேரியில் பழங்கால நாணயங்களை இலவசமாக பார்வையிடும் கண்காட்சிக்கு ஏற்பாடு செய்தேன். மாணவர்கள், பொதுமக்கள் என 1,000 க்கும் மேற்பட்டோர் வந்தனர்.
இது என்னை மேலும் ஊக்குவித்தது. 25வது கண்காட்சியை எர்ணாகுளம், 50 வது கண்காட்சியை சோமவார்பேட், 60வது கண்காட்சியை பிரியப்பட்டணா, 75, 100, 125, 150 வது கண்காட்சிகளை மைசூரு நகரிலும்; 175 வது கண்காட்சியை கடந்த மாதம், 18ம் தேதி ஹுன்சூரிலும் நடத்தினேன்.
கடந்த, 34 ஆண்டுகளாக அர்ப்பணிப்புடன் நாணயங்களை சேகரித்து உள்ளேன். கி.மு., 6ம் நுாற்றாண்டை சேர்ந்த நாணயங்கள் முதல் நவீன இந்தியா வரையிலான அரிய நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தபால் தலைகள் என்னிடம் உள்ளன.
தன்னலமற்ற சேவைக்காக கர்நாடகா சாதனை புத்தகத்தில் என் பெயர் இடம் பிடித்து இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், சாதனை செய்ய வேண்டும் என்று, நாணயங்களை சேகரிக்கவில்லை. அதன் மீது இருந்த ஆர்வமே காரணம். பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியரிடம் ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்ப்பதே எனது எண்ணம். என்னால் முடிந்த வரை நாணயங்களை சேகரித்து கொண்டே இருப்பேன். எனக்கு உதவியாக இருக்கும் அனைவருக்கும் நன்றி.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -:
